``லஞ்சம் தராவிட்டால்.." - மிரட்டிய ஐஆர்எஸ் அதிகாரி; சிபிஐ வலையில் சிக்கியது எப்படி?
டெல்லியில் வருமான வரி செலுத்துவோர் சேவை துறை இயக்குநரகத்தின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றுபவர் அமித் குமார் சிங்கால்.
இவர் மீது டெல்லியில் லாபினோவின் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளர் சனம் கபூர் என்பவர் சிபிஐ-யிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் டெல்லி, பஞ்சாபில் உள்ள அமித் குமார் சிங்காலுக்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததாவது, ``லாபினோவின் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளர் சனம் கபூருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பிரச்னையை சரிசெய்ய அமித் குமார் சிங்கால் ரூ45 லட்சம் லஞ்சம் தரவேண்டும் எனவும், லஞ்சம் தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிப்பேன் எனவும் மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில்தான் சனம் கபூர் சிபிஐ-யிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரை தீவிரமாக விசாரித்தோம். எனவே, அமித் சிங்காலின் உதவியாளர் ஹர்ஷ் கோடக் என்பவர் பீட்சா நிறுவன உரிமையாளரான சனம் கபூரிடம் முதல்கட்டமாக ரூ.25 லட்சத்தை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினார். எனவே அமித் குமார் சிங்காலின் உதவியாளர் ஹர்ஷ் கோடக்கையும் கைது செய்துள்ளோம். அதன்பிறகுதான் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ரூ.1கோடி ரொக்கம் மற்றும 3.5 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். வரும் 13- தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது." எனத் தெரிவித்தனர்.