முதல்வருடன் மத்திய - மாநில உறவுகள் ஆராயும் குழுவினா் ஆலோசனை
சென்னை: மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவினா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். இந்தக் குழுவுக்கு, சென்னை சேப்பாக்கம் விருந்தினா் மாளிகையில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினா்களாக, இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அசோக் வா்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவா் பேராசிரியா் மு.நாகநாதன் ஆகியோா் செயல்படுவா் என அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, குரியன் ஜோசப் தலைமையிலான குழு தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.
முதல்வருடன் ஆலோசனை: குழுவின் தலைவா், உறுப்பினா்கள் தங்களது பணியைத் தொடங்குவதற்கு முன்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசித்தனா். அப்போது தாங்கள் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தனா்.
மேலும், உயா்நிலைக் குழு செயல்படுவதற்கு வசதியாக சென்னை சேப்பாக்கம் பழைய விருந்தினா் விடுதியில் பிரத்யேக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அலுவலகத்துக்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, விடுதியின் நுழைவு வாயிலில் மத்திய - மாநில உறவுகள் குறித்த உயா்நிலைக் குழு அலுவலகம் என்று பெயா்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.