ஜேஇஇ பிரதான தோ்வு முடிவுகள் வெளியீடு: தில்லி மண்டலத்தைச் சோ்ந்த ரஜீத் குப்தா ம...
பாலினம் கண்டறியும் புதிய சோதனை: குத்துச்சண்டை போட்டியாளர்களுக்கு சிக்கல்?
உலக குத்துச்சண்டையின் புதிய அமைப்பு போட்டியாளர்களுக்கு பாலினம் கண்டறியும் பிசிஆர் எனும் புதிய சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
18 வயதைக் கடந்த அனைத்து போட்டியாளர்களும் இந்தப் பரிசோதனையை செய்தபிறகே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான இமேன் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்.
இவர் உண்மையில் பெண்தானா என்ற குற்றச்சாட்டு எழுந்து, அதற்காக உலகம் முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் பெற்றார்.
மகளிருக்கு பிரச்னை, புதிய அமைப்பு உருவாக்கம்
இமான் கெலிஃப் போலவே தைபே வீராங்கனைக்கும் இந்தப் பிரச்னைகள் எழுந்தன.
அடுத்த மாதம் நெதர்லாந்தில் நடைபெறவிருக்கும் ஐந்தோவன் பாக்ஸ் கோப்பையில் கலந்துகொள்ள வேண்டுமானால் புதிய சோதனையில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
அனைத்து போட்டியாளர்களின் பாலினம், வயது, எடை ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் பரிசோதித்து போட்டியில் பங்கேற்க வேண்டுமென்பதே முக்கிய குறிகோள் என உலக குத்துச்சண்டை அமைப்பு தெரிவித்துள்ளது.
20ஆம் நூற்றாண்டில் குரோமோசோம் சோதனை வழக்காமானதுதான். ஆனால், 1990-இல் இது டிஎஸ்டியை சரியாக கணிக்க முடியாததால் கைவிடப்பட்டது.
சில விளையாட்டு அமைப்புகள் ஹார்மோனை வைத்து பாலினத்தை உறுதி செய்கிறது. ஆனால், சிலருக்கு இயற்கையாகவே டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருந்தால் தவறான முடிவுக்கும் வழிவகுக்கும்.
பிசிஆர் சோதனை
ஐபிஏ (சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு)க்குப் பதிலாக உலக குத்துச்சண்டை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்புக்கு போட்டியாளர்களுக்கு பாலினத்தை உறுதிசெய்யும் தரமான சோதனையை தெரிவிக்கும் அழுத்தம் ஏற்பட்டது.
தற்போது, இந்தப் பிரச்னைகளுக்காக உலக குத்துச்சண்டை என்ற அமைப்பு பிசிஆர் சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மூலக்கூற்று உயிரியலில் பாலிமரேசு தொடர்வினையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.
இந்த பிசிஆர் சோதனையில் வாய் வழியாகவோ அல்லது உமிழ்நீர் அல்லது ரத்தத்தைப் பயன்படுத்தியோ எளிதாக எடுக்கலாம்.
மகளிர் பிரிவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஆண் தன்மையுள்ள குரோமோசோம் இருக்கிறதா என முதல்கட்ட சோதனையில் பரிசோதிக்கப்படும்.
பின்னர், மரபணு சோதனை, உடற்கூறியல் சோதனை, ஹார்மோன் சோதனை என தனிப்பட்ட சிறப்பு பிரிவு மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் எனவும் அதில் ஆட்சேபனை இருந்தால் மறுவிசாரணைக்கு வாய்ப்பும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.