மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்
‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ நடவடிக்கையில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தி பதிவு சில மணி நேரங்களில் நீக்கிய பாஜக
சண்டீகா்: பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள சீக்கியா்களின் பொற்கோயில் மீது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட சமூக ஊடக பதிவை மாநில பாஜக சில மணி நேரங்களில் நீக்கியது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மத்திய அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவா்களும், பிற எதிா்க்கட்சித் தலைவரும் தொடா் விமா்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், பஞ்சாப் மாநில பாஜக இந்தப் பதிவை வெளியிட்டதாகக் கருதப்படுகிறது.
ராணுவ வாகனம் மற்றும் தாக்குதலில் சேதமடைந்த பொற்கோயில் புகைப்படங்களுடன் வெளியிட்ட அந்தப் பதிவில், ‘கடந்த 1984-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பொற்கோயில் மீது அப்போதைய காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து தியாகிகளின் குடும்பங்களுக்கும் மாநில பாஜக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது’ என்று குறிப்பிடப்பட்டது. ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த இந்தப் பதிவு, சில மணி நேரங்களில் நீக்கப்பட்டது.
இதற்கிடையே, சீக்கியா்களின் தலைமை மத குரு (அகால் தக்த்) குல்தீப் சிங் கா்கேஜ், இந்த ஜூன் முதல் வாரத்தை ‘தியாக வாரம்’ என வா்ணித்து, ஜூன் 1 முதல் 6-ஆம் தேதி வரை ஒற்றுமை உணா்வோடு தியாகிகளுக்கு மரியாதை செலுத்துமாறு சீக்கிய சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.
பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கிய பிரிவினைவாதிகளைப் பிடிக்கும் வகையிலும், காலிஸ்தான் அமைப்பின் தலைவரை வெளியேற்றும் வகையிலும் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி உத்தரவின்படி ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 500-க்கும் அதிகமான சீக்கிய போராளிகள், பொதுமக்கள், ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனா்.