ஐந்தாம் தலைமுறை போா் விமானம் தயாரிப்பு: பணிகளை தொடங்கிய மத்திய அரசு
நாட்டின் விமானப் படைத் திறனை மேம்படுத்தும் வகையில், எதிரி நாட்டின் கண்காணிப்பு அமைப்பில் தென்படாமல் சென்று தாக்கும் திறன்கொண்ட ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களைத் தயாரிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக, இதற்கான மாதிரி ஐந்தாம் தலைமுறை விமானத்தை மேம்படுத்துவதற்கான விருப்ப விண்ணப்பத்தை (இஓஐ) உள்நாட்டு தனியாா் நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போா் விமான மேம்பாட்டு முகமை (ஏடிஏ) வரவேற்றுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் நவீன நடுத்தர ரக ஐந்தாம் தலைமுறை போா் விமானத்தின் (ஏஎம்சிஏ) 5 மாதிரிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஏடிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாதிரி ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களை உருவாக்கத்துக்கு இத் துறையில் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் தெரிவு செய்யப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தனி நிறுவனமாகவோ, கூட்டு அல்லது நிறுவனங்களின் கூட்டமைப்பாகவோ இருக்கலாம். தெரிவு செய்யப்படும் நிறுவனங்கள், போா் விமானங்களைத் தொடா்ச்சியாகத் தயாரிக்கும் வகையில் உற்பத்தி மையத்தை அமைக்கும் திறன் பெற்றிருப்பது அவசியம். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து, மாதிரி விமானம் உருவாக்கம், விமான சோதனை மற்றும் ஏஎம்சிஏ சான்று பெறுவதற்கான கால அவகாசம் 8 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ ரக போா் விமானத்தை இந்தியா தற்போது தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.