கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!
அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு
அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
பத்திரிக்கையாளர்களுடன் இன்று (ஜூன் 20) நடைபெற்ற சந்திப்பில் பேசிய அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, சுமார் 47 நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட தலைவருக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.
இதில், பெரும்பாலான கணக்குகள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
”அந்த வலைதள கணக்குகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் பதிவுகளில் எந்தவொரு ஈடுபாடும் காட்டவில்லை. அந்த கணக்குகள், ஒரு குறிப்பிட்ட தலைவர் மற்றும் அசாம் மாநில காங்கிரஸின் செயல்பாடுகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன” என்று அவர் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் கணக்குகள், பாலஸ்தீனம், ஈரான் ஆகிய நாடுகளையும் மற்றும் வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் என்பவரையும் ஆதரித்து இஸ்லாமிய அடிப்படைவாதப் பதிவுகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், முதல்வர் சர்மா, அந்த காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் குறிப்பிடுவது கடந்த சில நாள்களுக்கு முன்பு அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ் கோகோய்தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வரும் 2026 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், முதல்முறையாக அம்மாநில அரசியலில் வெளிநாடுகளின் ஈடுபாடு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்றும் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார்.
இதையும் படிக்க:தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு