ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம்: சட்டவிரோத கனிம வள திருட்டு? சாட்டிலைட் சர்வே துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக வனத்துறை அளித்த புகாரின் எதிரொலியாக சாட்டிலைட் கருவி உதவியுடன் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின காப்பகம் இணைக்கப்பட்டுக் கடந்த 2021 பிப்ரவரி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் 422.59 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயத்தைப் பொறுத்தவரை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் 305.86 ஹெக்டேர் பரப்பளவு உள்ளது.
இந்தப் புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் பரப்பளவு 0 முதல் 6.23 கிமீ வரை வேறுபடுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டி எடுக்கப்பட்டு செங்கல் சூலைகளுக்குக் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.
இதனால் வனவிலங்குகள் வழி தவறி, விளைநிலங்களுக்குள் சென்று பயிர்களைச் சேதப்படுத்துவதும், உயிரிழப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் ஆய்வு செய்ய கனிமவளத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை அடங்கிய சிறப்புக் குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
அக்குழு ஸ்ரீவில்லிபுத்தூர் மலையடிவாரப் பகுதிகளில் ஆய்வு செய்தபோது 100-க்கும் மேற்பட்ட சர்வே எண்களில் 6 அடி முதல் 15 அடி ஆழம் வரை செம்மண், சரளை மண் மற்றும் மணல் ஆகியவை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது உறுதியானது.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெங்கடேஸ்வராபுரம் பகுதியில் விருதுநகர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் சுகதா ரஹீமா தலைமையில் சாட்டிலைட் உதவியுடன் இயங்கும் டி.ஜி.பி.எஸ் கருவி மூலம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் கனிம வளங்கள் அள்ளப்பட்ட பகுதிகள் டிஜிட்டல் சர்வே மூலம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது.