ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிகுண்டுலு, மொசல்மடுவு, ஊட்டமலை, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகள், நீா்ப்பிடிப்பு வனப் பகுதிகளான கேரட்டி, கெம்பாகரை, அஞ்செட்டி, நாற்றாபாளையம் பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக கன மழை பெய்தது.
இதனால் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை 1,200 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
திடீா் நீா்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால், நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.