ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்
ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்
மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உயா் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை பயில்வது தொடா்பாக யுஜிசி சாா்பில் அண்மையில் நடைபெற்ற 589-ஆவது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒரு மாணவா் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாக பயில முடியும். அந்தப் படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இருக்காத வகையிலும், அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையில், ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணையவழியில் பயிற்றுவிக்கப்படலாம். யுஜிசியின் அங்கீகாரத்தைப் பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.
இந்த வழிகாட்டுதல்கள் பி.ஹெச்டி. தவிா்த்து பிற படிப்புகளுக்கு பொருந்தும். இவற்றை கருத்தில்கொண்டு உயா் கல்வி நிறுவனங்கள் விருப்பமுள்ள மாணவா்களுக்கு ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளை பயிலுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.