குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!
'கதை சொல்லும் சேவாக்; ஆர்ப்பரிக்கும் அக்தர்!'- எப்படியிருக்கிறது 'The Greatest Rivalry Ind vs Pak'?
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் 2004 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்ற தொடர் மிக முக்கியமானது. அரசியலாகவும் முக்கியத்துவம் வாய்ந்திருந்த அந்தத் தொடர் அத்தனை சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இந்தியா முதல் முதலாக பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கும். கூடவே 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரையும் இந்தியா வென்றிருக்கும். இந்த 2004 சுற்றுப்பயணம்தான் இந்த சீரிஸின் மையமாக இருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/pecd81r1/Screenshot2025-02-10-13-17-32-883com.google.android.youtube.jpg)
இந்த சுற்றுப்பயணத்துக்கு முன்பாக இருதரப்பிலும் நிகழ்ந்து கொண்டிருந்த அரசியல் சமாச்சாரங்களை விளக்கி மெதுவாக போட்டிகளுக்குள் நுழைகிறார்கள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முக்கியமான முன்னாள் வீரர்களே கதையை சொல்லும் வகையில் அமைந்திருப்பது ரொம்பவே வசீகரிக்கிறது. பாகிஸ்தான் தரப்பில் சோயப் அக்தரும் இந்தியா தரப்பில் சேவாக்கும்தான் அதிக நேரம் உரையாடுகிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் மோதலை கடந்து இரு நாட்டிலும் கிரிக்கெட் எப்படி இத்தனை அசுரமாக வளர்ந்தது? அக்தருக்கும் சேவாக்குக்கும் எப்படி கிரிக்கெட்டின் மீது ஆர்வம் வந்தது? அவர்கள் இந்தியா - பாகிஸ்தான் மோதலை எப்படி பார்த்தார்கள்? என ஆழமாகவே பேசியிருக்கிறார்கள்.
`இங்க ஆடி வின் பண்ணி கொடுத்தா ஒரு ஹீரோவா திரும்ப போலாம்...!'
'ஒரு நாயகன் உதயமாகிவிட்டான்..' என இந்திய சுற்றுப்பயணத்தின் போது சச்சினையும் டிராவிட்டையும் போல்டாக்கிய சமயத்தில்தான் உணர்ந்தேன் என தன்னைப் பற்றிய மதிப்பீட்டை முன்வைக்கிறார் அக்தர். இன்னொரு பக்கம் சேவாக் தன்னுடைய முதல் போட்டியிலேயே அக்தரிடம் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அணியிலிருந்து டிராப் செய்யப்படுகிறார். மீண்டும் கடினமாக உழைத்து உள்ளூர் போட்டிகளில் ஆடுகிறார். அங்கே சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கிறார். அந்த 2004 பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கும் தேர்வாகிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/bdp5hfmz/Screenshot2025-02-10-13-16-51-436com.google.android.youtube.jpg)
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் இரு அணி வீரர்களுக்கும் உளவியல்ரீதியாக என்னென்ன சிக்கல்களை கொடுக்கிறது. போட்டிகளுக்கு முன்பாக எவ்வளவு அழுத்தமாக உணர்கிறார்கள் என்பதையெல்லாம் அக்தர் மற்றும் சேவாக்கின் அனுபவம் வழியே அப்படியே கடத்தியிருக்கிறார்கள். 'இங்க மட்டும் நான் சரியா ஆடலன்னா என்ன டீம்ல இருந்து தூக்கிடுவாங்கன்னு தெரியும். அதேநேரத்துல இங்க ஆடி வின் பண்ணி கொடுத்தா ஒரு ஹீரோவா திரும்ப போலாம்னும் தெரியும்.' என 'முல்தான் சுல்தான்' ஆக மாறுவதற்கு முன் தனக்கு இருந்த மனநிலையைப் பற்றி சேவாக் விவரித்திருப்பார்.
இவர்களை தாண்டி கங்குலி, இன்சமாம் உல் ஹக், ரமீஷ் ராஜா, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஜாவேத் மியான்தத், தவாண், அஷ்வின் என இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஆடிய அனுபவமுள்ள பல வீரர்களும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்திருக்கின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் சில முக்கியமான சம்பவங்களை மறக்கவே முடியாது. அதையெல்லாம் தவறவிடாமல் ஒரிஜினல் புட்டேஜ்களுடன் அள்ளி வந்து நாஸ்டலாஜிக் ஃபீலையும் கொடுக்கிறார்கள். குறிப்பாக, அந்த 1999 சென்னை டெஸ்ட்டை பற்றி அஷ்வின் ஒரு ரசிகராகவும் வக்கார் யூனிஸ் களத்திலிருந்த வீரராகவும் விவரித்திருக்கிறார்கள். சொந்த மண்ணில் இந்திய அணி தோற்ற போதும் சிறப்பாக ஆடிய பாகிஸ்தானுக்காக சென்னையின் ரசிகர் கூட்டம் எழுந்து நின்று கைத்தட்டியிருக்கும். 'என்ன நடந்ததென்றே புரியவில்லை. எல்லாரும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். நாங்களும் மைதானத்தை சுற்றி வந்து நன்றி தெரிவித்திருந்தோம்.' என இன்னமும் அந்த பிரமிப்பு விலகாமல் பேசியிருந்தார் வக்கார் யூனிஸ்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/ad3ogz82/Screenshot2025-02-10-13-15-43-153com.google.android.youtube.jpg)
அதேமாதிரி, மியான்தத் ஒரு போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்துக் கொடுப்பார். அதையும் முக்கியமான கட்டத்தில் 2004 தொடரோடு தொடர்புப்படுத்தி காட்டி சுவாரஸ்யம் ஏற்றியிருப்பார்கள்.
மூன்று எபிசோடுகளை கொண்ட சீரிஸ் இது. எங்கேயுமே பெரிதாக ஒரு தரப்பைச் சார்ந்தோ ஒரு தரப்பின் துதி பாடும் விதத்திலோ இல்லை என்பதே பெரிய ஆறுதல். சச்சின், டிராவிட், கங்குலி என இந்தியாவின் பேட்டர்களை நாயகர்களாக காட்டியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அதற்கு ஈடாக இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர் என பாகிஸ்தானின் வேகப் படையையும் கொண்டாடியிருக்கிறார்கள். பாகிஸ்தான் பௌலர்களின் ரிவர்ஸ் ஸ்விங்கை பற்றியெல்லாம் அத்தனை டீட்டெய்லாக பேசியிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் தாண்டி இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பின்னால் உள்ள அரசியலையும் தொட்டுச் சென்றிருக்கிறார். ஒரு காலத்தில் இரு தரப்பிலும் அரசியல் பிரச்சனைகள் சூழ்ந்திருந்த போது கிரிக்கெட்டைதான் அதை சரி செய்வதற்கான வழியாக பார்த்திருக்கிறார்கள். வலதுசாரியாக இருந்தபோதும் வாஜ்பாய் 2004 இல் இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆட வேண்டும் என்பதில் பெரிய முனைப்பு காட்டியிருக்கிறார். பாகிஸ்தான் தரப்பிலும் இந்திய வீரர்களுக்கு உச்சபட்ச பாதுகாப்புகளை வழங்கி விருந்தோம்பி அனுப்பியிருக்கிறார்கள்.
26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு இருதரப்பிலிருந்துமே இதே மாதிரியான முயற்சிகள் பெரிதாக எடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் கூட இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் ஆடி விட்டது. ஆனால், இந்திய அணி அங்கு செல்லவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்கவும் பிசிசிஐ தயாராக இல்லை. இந்திய அணி ஆடும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என்பதே அதற்கான உதாரணம்.
இரு அணிகளும் ஆடும்போது பரப்பப்படும் வெறுப்பரசியலை பற்றி மேலோட்டமாக பேசிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதையும் ஆழமாக பேசியிருந்தார் மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் டாக்குமெண்ட்ரிக்களில் ஒன்றாக மாறியிருக்கும். வெளிப்படையாக பேச சில கட்டுப்பாடுகளும் எல்லைகளும் இருந்திருந்தாலும் அதற்குள் அழுத்தமாகவே விளையாட்டின் உன்னதத்தை கடத்திவிட்டார்கள்.
சீரிஸில் பேசியிருக்கும் ஒரு பத்திரிகையாளர், 'ஸ்போர்ட்ஸ்தான் எல்லாரையும் ஒண்ணாக்கும்!' என பேசியிருப்பார். முழுக்க முழுக்க உண்மை. எப்போதும் விளையாட்டுதான் மக்களை ஒன்றிணைக்கும். அந்த செய்தியை தனக்கான எல்லைக்குள் நின்று அழுத்தமாக பேசியிருக்கும் 'The Greatest Rivalry : India vs Pakistan' தொடரை ஒரு முறை கட்டாயம் பாருங்கள்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play