லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க : பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்!
லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்துவதற்கு எதிராக சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் ஃபியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் என்ற லாட்டரி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிக்கிம் உயர் நீதிமன்றம், லாட்டரி என்பது அரசியலமைப்பின் மாநிலப் பட்டியலில் உள்ள 62வது பிரிவில் "பந்தயம் மற்றும் சூதாட்டம்" என்ற சொற்றொடரின் கீழ் வருவதாகவும், மாநில அரசு மட்டுமே வரி விதிக்க முடியும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து, மத்திய அரசுத் தரப்பில் 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
அரசியலமைப்பின் 62வது பிரிவின் கீழ் மாநிலத்தால் விதிக்கப்படும் சூதாட்ட வரி மட்டுமே லாட்டரி நிறுவனங்கள் செலுத்தினால் போதும், மத்திய அரசின் சேவை வரி செலுத்த தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், லாட்டரி சீட்டுகளை வாங்குபவருக்கும் நிறுவனத்துக்கும் இடையேயான பரிவர்த்தனைகளில் சேவை வரி விதிக்க முடியாது என்றும் மத்திய அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.