45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!
கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை: கமல்ஹாசன்
கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு கர்நாடக முதல்வா் சித்தராமையா உள்பட பல்வேறு கா்நாடக அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவா் மன்னிப்பு கேட்கும் வரை கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதி கிடைக்காது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அவா் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்படாது என்று கா்நாடக திரைப்பட வா்த்தக சபை அறிவித்தது.
கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கெடு விதித்திருந்தது.
இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாவது:
என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நாம் அனைவரும் ஒரெ குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் பேசினேன்.
சிவராஜ்குமார் மீது பாசமாக கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. சிவராஜ்குமார் சில அவமானங்களை சந்திக்க நேர்ந்தது எனக்கு வருத்தமாக உள்ளது. கன்னட மொழியின் வளமான பராம்பரியம் குறித்து எவ்வித விவாதமும் கிடையாது.
எந்தவிதத்திலும் கன்னட மொழியை நான் குறைத்து மதிப்பிடவில்லை. என் வாழ்நாள் முழுவதும் கன்னட மக்கள் அளித்த அன்பையும் ஆதரவையும் போற்றி வருகிறேன். கன்னட மக்கள் அவர்கள் தாய் மொழி மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கும் மரியாதை உண்டு.
நான் எப்போதும் பொது அமைதியின்மைக்கு இடையூறாக இருக்க மாட்டேன் என்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல்? கமலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!