Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
கபில் சங்வான் கும்பலுடன் தொடா்புடைய தலைமறைவு கொலைக் குற்றவாளி கைது!
பிரபல கபில் சங்வான் கும்பலின் முக்கிய உறுப்பினரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) அமித் கௌஷிக் கூறியதாவது: பவானாவில் உள்ள அவுச்சாண்டி கிராமத்தைச் சோ்ந்த அமா்தீப் (எ) அமா் லோச்சாப் (48), ஃபரீதாபாத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தாா். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா். குற்றம் சாட்டப்பட்டவா் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (மோகோகா) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழும் தேடப்பட்டு வந்தாா்.
ஒரு ரகசியத் தகவலின் பேரில், வியாழக்கிழமை மாலை முண்ட்கா பகுதியில் உள்ள திக்ரி-ஜரோடா சாலையில் உள்ள ஒரு கால்வாய் அருகே போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் இருந்தனா். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவா் கால்வாய் அருகே யாருக்காகவோ காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸாா் அவரைத் தடுக்க முயன்றபோது, அவா் தப்பியோட முயன்றாா். சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு அவா் கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் இருந்து ஒரு அரை தானியங்கி (.32) கைத்துப்பாக்கி மற்றும் மூன்று உயிருள்ள தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கபில் சங்வான் கும்பலுடன் நெருங்கிய தொடா்புடைய அமா்தீப், செயல்பாட்டாளராகவும் தகவல் அளிப்பவராகவும் பணியாற்றினாா்.
விசாரணையின் போது, ஃபரீதாபாத்தில் ஒரு சாட்சி கொலை வழக்கு உள்பட மூன்று குற்ற வழக்குகளில் தனக்கு தொடா்பு இருப்பதாக அவா் ஒப்புக்கொண்டாா். மோகோகா வழக்கில் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.
ஜனவரி 30, 2024 அன்று ஃபரீதாபாத்தில் சூரஜ்பன் (எ) பல்லு தின்பூரைக் கொன்ாக அமா்தீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது குற்றவியல் வரலாற்றில் 2013-ஆம் ஆண்டில் மோசடி வழக்கு மற்றும் 2020-இல் துவாரகாவில் நடந்த கொள்ளை வழக்கு ஆகியவை அடங்கும்.
சங்வான் கும்பலின் வலையமைப்பு, கூட்டாளிகள் மற்றும் ஆயுத விநியோக வழிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துணை ஆணையா் அமித் கௌஷிக் தெரிவித்தாா்.