கரூரில் திமுக சாா்பில் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டி
கரூரில் திமுக சாா்பில் நடைபெறும் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டியின் அரையிறுதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூா் தெற்கு பகுதி 40-ஆவது வட்ட திமுக சாா்பில் மாநில அளவிலான மின்னொளி கையுந்துப் பந்து போட்டி கரூா் தெற்கு காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. போட்டிக்கு 40-ஆவது வட்ட திமுக பொறுப்பாளா் எம்.சி. காா்த்திகேயன் தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கிவைத்தாா்.
இதில் கரூா், நாமக்கல், மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 22 அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் சேலம் மேட்டூா் அணியும், கரூா் விஎஸ்பி அணியும் மோதின. இரு அணிகளைச் சோ்ந்த வீரா்களும் மாறி, மாறி புள்ளிகளை எடுத்தவாறு விளையாடிக்கொண்டிருந்தனா். இறுதிப்போட்டிகள் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இதில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பையும், பரிசாக ரூ.15,072-ம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.10,072 மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.7,072-ம் கோப்பையும், நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5,072 மற்றும் கோப்பையும் வழங்கப்பட உள்ளது.
கோப்பை மற்றும் பரிசுகளை கரூா் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி வழங்க உள்ளாா்.