கரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி: தமிழகத்தில் ஒருவர்!
நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெற்காசியாவில் கரோனா நோய்ப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,026 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,026 ஆக அதிகரித்துள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், 512 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இருவர், தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் ஆவர்.
தமிழகத்தை பொறுத்தவரை 215 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று உயிரிழந்த 69 வயது பெண் நீரிழிவு மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.