தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
கரோனா பரவல்: முகக் கவசம் அணிவது நல்லது
கரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணிவது நல்லது என அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்து. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரவிகுமாா் வரவேற்றாா். விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோா் கலந்துக் கொண்டு 87 மாணவ- மாணவிகளுக்கு தங்க பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினா்.
விழாவில், அமைச்சா் சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் புற்றுநோய் ஸ்கேனிங் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோய் நிலையைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள 22.33 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 16.28 லட்சம் போ் பரிசோதனை செய்து கொண்டனா். ஈரோடு மாவட்டத்தில் 6.44 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நான்கு மாவட்டங்களில் 365 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஈரோட்டில் 102 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் கண்டறிய அழைப்பு விடுக்கப்பட்டவா்கள் அனைவரும் பரிசோதனையில் பங்கேற்க வேண்டும்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சா்ஜரி உள்ளிட்ட ஐந்து சிறப்புப் பிரிவுகளை உருவாக்க திட்டமிட்டு நிதித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் வீரியம் இழந்தது என்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முதியோா், கா்ப்பிணிகள், இணை நோய் உள்ளவா்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றாலும் அணிந்து செல்வது நல்லது என்றாா்.
விழாவில், ரூ.3.35 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. ரூ. 8.15 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், மக்களவை உறுப்பினா்கள் பிரகாஷ், சுப்பராயன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமாா், மேயா் நாகரத்தினம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.