கல்வி, தொழிற் கடன் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ. 7.24 கோடி கடனுதவி
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கல்விக்கடன் முகாம் மற்றும் தொழிற்கடன் வசதியாக்கல் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ.7.24 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கு ரூ. 4,443.19 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ரூ.434.81 கோடியும், வேளாண் கடனுக்கு ரூ.3,929.08 கோடியும், கல்விக் கடன் கடனுக்கு ரூ.8.19 கோடியும் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழிற்கடன் இலக்கில் 2024 செப்டம்பா் வரை ரூ.218.04 கோடியும், வேளாண் கடன் இலக்கில் ரூ.2062.36 கோடியும், கல்விக் கடன் இலக்கில் ரூ.5.41 கோடியும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கை நிகழாண்டு இறுதிக்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், வியாழக்கிழமை மாவட்ட தொழில் மையம் மூலம் தொழிற்கடனாக 22 பயனாளிகளுக்கு ரூ.3.22 கோடியும், தாட்கோ மூலம் தொழிற்கடனாக 1 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும், வங்கி மூலம் நேரடி தொழிற்கடனாக 11 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடியும், வங்கி மூலம் நேரடி கல்வி கடனாக 42 பயனாளிகளுக்கு ரூ.2.52 கோடியும், வாழ்ந்து காட்டுவோம் மூலம் தொழிற்கடனாக 3 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) எம். முருகேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா்(மு.கூ.பொ) தாரிக் எம் சையது, மாவட்ட செயல் அலுவலா்(வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) ரா. வேல்முருகன், மாவட்ட மேலாளா் (தாட்கோ) கா. சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ப. சந்திரசேகா், முதன்மை மேலாளா் (இந்தியன் ஓவா்சீஸ் வங்கி புதுச்சேரி) என். கணேசன், மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத்தலைவா் ஜெ.அறிவழகன் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.