Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
`கிரிக்கெட்ல இந்த சம்பவம் நடந்து 20 வருஷம் ஆச்சு’ குறைந்த இன்னிங்ஸில் நம்பர் 1 இடத்தை பிடித்த இளைஞன்
பிசிசிஐ-யின் சமீபகால செயல்பாடுகள் காரணமாக 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ச்சியாக எழுப்பிய வண்ணம் வருகின்றனர்.
தேர்வுக்கு குழு தலைவர் அஜித் அகர்காரும், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் ரோஹித், கோலி விஷயத்தில் மழுப்பி வருகின்றனர்.

இத்தகைய நெருக்கடிக்கிடையில்தான் ரோஹித்தும், கோலியும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மூலம் 6 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினர்.
முதல் இரண்டு போட்டிகளிலிலும் கோலி டக் அவுட், ரோஹித் ஒரு அரைசதம் அடித்திருந்தார். தொடரை இழந்தாலும் கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டும் என இந்தியா களமிறங்கியது.
முதல் இரண்டு போட்டிகளைப் போலவே கேப்டன் கில் இப்போட்டியிலும் அரைசதம்கூட அடிக்காமல் ஏமாற்றம் தந்தாலும், ரோஹித் சதமும், கோலி அரைசதமும் அடித்து 200+ பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசிவரை களத்தில் இருந்து இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தனர்.
தொடரை இந்தியா இழந்திருந்தாலும், தொடர் நாயகன் விருதை ரோஹித் வென்றார். அதுமட்டுமல்லாமல் தனது 38-வது வயதில் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறினார் ரோஹித்.
இதன் மூலம் ஐ.சி.சி வரலாற்றில் அதிக வயதில் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் இடம் பிடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரோஹித்.
இத்தனைக்கும் ரோஹித் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்துக்கு வருவது இதுதான் முதல்முறை.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 264 ரன்கள், 3 இரட்டை சதங்கள், 30 வயதுக்குப் பிறகு அதிக சதங்கள் (23) அடித்த வீரர், இன்னும் 3 சிக்ஸ் அடித்தால் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் பட்டியலில் முதலிடம் போன்ற தனித்துவ சாதனைகள் கொண்ட ரோஹித் இன்று ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் இடம் பிடிப்பதற்கு 276 போட்டிகள் (268 இன்னிங்ஸ்) ஆகியிருக்கிறது.
இந்த இடத்தில்தான், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளிலேயே பேட்டிங்கில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனை 44 ஏஜ் ஃபைன் ஒயின் முன்னாள் இந்திய வீரர் வசம் இருக்கிறது.
2004 டிசம்பர் 23-ல் தனது முதல் ஒருநாள் போட்டியான வங்காளதேசத்துக்கெதிரான போட்டியில் டக் அவுட்டான அந்த இளைஞன் அடுத்த 37 இன்னிங்ஸ்களில் இப்படியொரு இந்திய வீரர் இதற்கு முன் இருந்ததில்லை என்ற அளவுக்கு சரவெடியாக வெடித்து, ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தர வரிசையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினான் (2006 ஏப்ரல்).
அந்த இளைஞன் வெறும் 42 போட்டிகளில் டாப் 10-ல் முதலிடத்துக்கு முன்னேறியபோது அடுத்த 9 இடங்களில் இருந்தவர்கள் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், சைமண்ட்ஸ், கிரீம் ஸ்மித், மைக் ஹஸ்ஸி, கெவின் பீட்டர்சன், குமார் சங்ககாரா, டிராவிட், யுவராஜ்.

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போதே, `யாரோ 10 பேர அடிச்சு டான் ஆனவன் இல்லடா, நான் அடிச்ச 10 பேருமே டான்' என கே.ஜி.எஃப் படத்தில் வருவது போல சம்பவம் செஞ்சிருக்கான் அந்த இளைஞன்.
இந்த ஒருமுறை மட்டுமல்ல இதன்பிறகும் 2008, 2010 என மேலும் இருமுறை ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார் அந்த வீரர்.
2006-ல் முதலிடத்துக்கு முன்னேறியபோது குறைந்த காலம் மட்டுமே அந்த இடத்தில் நீடித்த அவர், இரண்டாவது முறையாக 2008 முதலிடத்துக்கு முன்னேறியபோது தொடர்ச்சியாக 700 நாள்களைக் கடந்து 2010 வரை முதலிடத்திலேயே நீடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 10 பட்டியலில் 2006 முதல் 2016 வரை 10 தொடர்ச்சியாக ஆண்டுகள் அவர் இருந்தார்.
இப்போது அந்த வீரர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றே 6 வருஷம் ஆகிவிட்டது.
ஆனாலும், ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை வரலாற்றில் குறைந்த போட்டிகளில் முதலிடம் பிடித்தவர் என்ற அந்த வீரரின் சாதனை சுமார் 20 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது.
அத்தகைய சாதனையை செய்தவர் யாரென்று இந்நேரம் உங்களுக்கே தெரிந்திருக்கும்... அவர்தான் நம் `கேப்டன் கூல் (Captain Cool)' தோனி.

இந்திய வீரர்கள் பட்டியலில் தோனிக்கு அடுத்தபடியாக கில் 41 இன்னிங்ஸ்களிலும், சச்சின் 101 இன்னிங்ஸ்களிலும், கோலி 112 இன்னிங்ஸ்களிலும், ரோஹித் 268 இன்னிங்ஸ்களிலும் நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேன் இடத்தைப் பிடித்திருக்கின்றனர்.
தோனியின் இந்த சாதனை முறியடிக்கப்படுமா அல்லது வரலாற்றில் அப்படியே நிலைக்குமா என்பதெற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.
வரலாறு அப்படித்தான் வல்லவனுக்கு வல்லவன் ஒருவனை எப்போதும் வைத்திருக்கும்.
ஆனால் அதுவரையில் எத்தனை பேர் வந்தாலும போனாலும் அந்த கிரீடம் தலைவன் தோனிக்கே!


















