'கிளர்க் பணிக்கு ரூ.3 லட்சம்' - அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; கல்லூரி பேராசிரியர் இடை நீக்கம்
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி ராஜேஸ்வரிக்கு திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய தனபால், இடைத் தரகர் செல்வராஜுடன் சென்று திண்டுக்கல் MVM அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த சியாமளாதேவியை அணுகியுள்ளார். பேராசிரியர் சியாமளாதேவி, ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணிக்கு ரூ.5 லட்சம் என்றும், கிளர்க் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.3 லட்சம் என்றும் கூறியுள்ளார்.

முன்பணமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கேட்டுள்ளார். இதையடுத்து, இடைத் தரகர் செல்வராஜ் கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜேஸ்வரி, காயத்ரி, நந்தினி, மாலினி, ரேவதி, செல்வராணி, லிங்கேஸ்வரன் என ஏழு பேரிடம் அரசுக் கல்லூரி பணிக்காக ரூ.28 லட்சம் முன்பணமாக வாங்கி சியாமளாதேவியிடம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், அரசுக் கலைக் கல்லூரிக்கு ராஜேஸ்வரி, நந்தினி, காயத்ரி ஆகியோரைத் தனித்தனியாக அழைத்து, இவரே போலி நேர்காணலையும் நடத்தியுள்ளார். லிங்கேஸ்வரனுக்கு சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் நேர்காணல் நடக்க உள்ளதாகக் கூறி, அரசு முத்திரையுடன் கூடிய கடிதத்தைத் தயாரித்து, அதில் போலியாக ஆணையர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்.
எல்லாம் முடிந்து 2 வருடம் ஆகியும் வேலை குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகம் அடைந்த பணம் கொடுத்தவர்கள் சியாமளா தேவியிடம் கொடுத்த பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் சியாமளாதேவி சரியான பதில் அளிக்காமல் பணம் கொடுத்தவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வெளி நபர்கள் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. பிரதீப்பிடம் பாதிக்கபட்டவர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு DSP குமரேசன் தலைமையிலான போலீசார் சியாமளாதேவிக்கு விசாரணைக்கு வருமாறு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து சியாமளாதேவியைக் கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
சியாமளாதேவி ரெட்டியார்சத்திரம் அரசு கலைக் கல்லூரியில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.