30 வயதுக்கு மேலும் மணமாகவில்லையா? லவ் மேரேஜ் - திரை விமர்சனம்!
சென்னை ஐஐடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை?; துணிச்சலுடன் போராடியதால் தப்பித்தார் - நடந்தது என்ன?
சென்னை ஐஐடி-யில் 20 வயதான இளம்பெண் ஒருவர் Internship-க்கு வந்திருக்கிறார். இதற்காக அவர் ஐஐடி வளாகத்திலேயே தங்கியிருக்கிறார். கடந்த 25.6.2025-ம் தேதி இரவில் ஐஐடி வளாகத்தில் அவர் தனியாக நடந்துச் சென்றார். அப்போது கையில் கட்டை ஒன்றை வைத்திருந்த இளைஞர் ஒருவர், அந்த இளம்பெண்ணை வழிமறித்தார். என்ன நடக்கிறது என தெரியாமல் அந்த இளம் பெண் யோசிப்பதற்குள் இளைஞர், அவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். வலியால் அவர் துடித்தபோது இளம்பெண்ணிடம் அத்துமீற அவர் முயன்றார்.
அதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இளைஞரோடு போராடினார். பின்னர் இளைஞரின் பிடியிலிருந்து தப்பித்ததோடு செக்யூரிட்டிகளிடம் விவரத்தைக் கூறி சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறார் இளம்பெண். ஆனால் அதற்குள் அந்த இளைஞர் தப்பிவிட்டார். இதையடுத்து ஐஐடி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை செக்யூரிட்டிகள் ஆய்வு செய்தனர். அதோடு இந்த நேரத்தில் ஐஐடி வளாகத்துக்குள் வெளிநபர்கள் வர வாய்ப்பில்லாததால் அங்கு வேலை செய்பவர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என செக்யூரிட்டிகள் கருதினர்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இளம்பெண், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இளம்பெண்ணிடமும் என்ன நடந்தது என பெண் போலீஸார் விசாரித்தனர். இளம்பெண் அளித்த தகவலின்படி விசாரித்ததில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது ஐஐடி வளாகத்தில் செயல்படும் புட் கோர்ட் ஒன்றில் வேலை செய்யும் ரோஷன்குமார் (22) என்று தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது சம்பவத்தன்று உடல்நலம் சரியில்லை எனக் கூறி புட்கோர்ட் வேலைக்குச் செல்லாமல் விடுமுறையிலிருந்திருக்கிறார். பின்னர், இரவு 9 மணியளவில் ஐஐடி வளாகத்தில் தனியாக நடந்து வந்த இளம்பெண்ணுக்கு ரோஷன்குமார் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரோஷன்குமாரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` இளைஞர் ரோஷன்குமாரின் தாக்குதலில் நிலைகுலைந்த இளம்பெண், தைரியமாக செயல்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தை மூடி மறைக்காமல் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தால்தான் ரோஷன்குமாரை கைது செய்ய முடிந்தது. ரோஷன் குமாரின் பின்னணியை விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளோம்" என்றனர்.