சிந்து நதி நீர்: "பாகிஸ்தானின் கடிதங்கள் இந்தியாவின் மனதை மாற்றாது" - அமைச்சர் திட்டவட்டம்!
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற தொடர்ந்து கடிதங்கள் எழுதப்பட்டாலும், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
"சிந்து நதி நீர் திட்டத்தின் கீழ் நாட்டின் நீர்வளம் எங்கும் போகப்போவதில்லை" எனக் கூறியவர், பாகிஸ்தானின் கடிதங்கள் இந்தியாவின் மனதை மாற்றாத வெற்று சம்பிரதாயங்கள் எனக் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தலைவர் பிலாவல் பூட்டோ இந்தியாவை மிரட்டும் விதமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) கீழ் பாகிஸ்தானுக்கு உரிமையுள்ள தண்ணீரின் பங்கைத் தரவில்லை என்றால் இந்தியாமீது போர் தொடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.
அதற்கு, இது போன்ற வெற்று மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது என்று பதிலளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேர் உயிரிழக்கும் வகையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடரும் எண்ணம் இல்லை என கடந்தவாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.