PMK: பாமக-வை ராமதாஸ் தொடங்கியது ஏன்? - மக்கள் மருத்துவர் டு மூச்சிருக்கும் வரை நானே தலைவர் |In-depth
1987 இல் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. மருத்துவர் ஒருவரின் தலைமையில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நெடுஞ்சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பாதைகளை தடுத்தனர். அந்தப் போராட்டத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் போக்குவரத்தின்றி முற்றிலுமாக ஸ்தம்பித்து போயிருந்தது.

ஒரு வாரம் நடந்த இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது. இறுதியாக போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 21 பேர் மரணமடைத்தனர். போராட்டத்தின் தலைமைக்காரர் சிறையிலடைக்கப்பட்டார். அந்தப் போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டக்காரர் வேறு யாரும் இல்லை வன்னியர் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய பாமக நிறுவனர் ராமதாஸ்தான்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்விசிறி என்ற கிராமத்தில் 1939-ம் ஆண்டு ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் ராமதாஸ். பள்ளிப் படிப்பை தனது சொந்த ஊரில் பயின்ற ராமதாஸுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. மருத்துவப் படிப்பை முடித்த கையோடு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணிப் புரிந்தார். பிறகு ஏழை மக்களுக்குச் சேவை செய்ய எண்ணிய ராமதாஸ் சொந்தமாக க்ளினிக் ஒன்றைத் தொடங்கி, 2 ரூபாய் கட்டணத்தில் எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.

பேருந்திற்கு காசில்லாமல் தன்னிடம் மருத்துவம் பார்க்கவரும் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தது மட்டுமின்றி பேருந்து கட்டணம் கொடுத்து அனுப்பி வைத்து மருந்துவராக மிளிர்ந்தார் ராமதாஸ். முற்போக்குச் சிந்தனையும், சமூக நீதிப்பார்வையும் கொண்ட ராமதாஸ், தான் சார்ந்த வன்னியர் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்.
மக்கள், கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கி இருப்பதைக்கண்ட அவர் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர் 'வன்னியர் சங்கம்' என்ற புதிய அமைப்பை 1980 ஆம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி - வேலைவாய்ப்பில் `தனி இட ஒதுக்கீடு’ வேண்டும் என்று கேட்டு, 1980-ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் இட ஒதுக்கீடு கோரி முதல் மாநாட்டை நடத்தினார்.
1984-ம் ஆண்டு சென்னை மெரினாவில் பட்டினிப் போராட்டம், 1985-ல் சென்னையில் லட்சக்கணக்கானோருடன் பேரணி மற்றும் மாநாடு என தொடர்ந்து, 1986-ல் மட்டும் பல்வேறு காலகட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பட்டை நாமப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம், ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் எனத் தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தினார்.

தமிழகத்தில் வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குச் சென்று, மக்கள் சந்திப்பை நடத்தினார். `கனல்’ என்ற இதழைத் தொடங்கி எழுதியும் வந்தார். இதன் விளைவாக அரசியல், பொருளாதாரம், வர்க்கம் என திசைக்கொரு புறமாகப் பிரிந்து கிடந்த வன்னியர் சமுதாய மக்களில் பெரும்பாலானவர்களை ஒன்று திரட்டினார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க அப்போதிருந்த அதிமுக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. பின்னர், 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று முதல்வரான கருணாநிதி, வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை `மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (MBC) என்ற புதிய பட்டியலில் இணைத்து 20% இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
இதற்கு வன்னிய சமூகத் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், குறைவான இட ஒதுக்கீட்டை தந்ததால் மருத்துவர் ராமதாஸ், மிக்கடுமையாக விமர்சித்தார். வன்னியர் சமூகத்துக்கு கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டதாகவே கருதினார். பின்னர்தான் வன்னியர் சங்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றவேண்டும் என முடிவெடுத்தார் ராமதாஸ்.
1989- ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் தேதி வன்னியர் சங்கம் ' பாட்டாளி மக்கள் கட்சி' யாகப் பரிணமித்தது. சென்னையில் சீரணி அரங்கத்தில் நடைபெற்ற கட்சியின் தொடக்க விழாவில் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர் என்கிறார்கள். அப்போதைய காலக்கட்டத்தில் தமிழக வரலாற்றில் ஒரு கட்சி தொடக்க விழாவில் இவ்வளவு பேர் கலந்து கொண்டது அதுவே முதன் முறை என்றும் கூட பேசப்பட்டது.

புதிதாகக் கட்சி ஆரம்பித்தவுடன் ராமதாஸ்,
"எங்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அது என் சொந்தச் செலவில்தான் எடுத்துக் கொள்வேன்.
வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் நிற்க மாட்டேன்.
நானும் எனது குடும்ப வாரிசுகளும் கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டோம்.
சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது.
இவை என் இறுதிமூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்" என்று சில உறுதிமொழிகளை அறிவித்தார். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை தங்களின் வழிகாட்டிகளாக அறிவித்த ராமதாஸ் தங்கள் கட்சியின் பொதுச் செயலாளாரக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருக்க முடியும் என்கிற வகையில் கட்சியின் பைலாவை நிர்மாணித்தார். திராவிடக் கட்சிகளை மட்டுமே கண்டுவந்த தமிழக மக்கள் சிலரின் கண்களில் பாமக தென்பட ஆரம்பித்தது.
தமிழ்மொழி வளர்ச்சிக்காக 'கொங்குத் தமிழ்' அறக்கட்டளை, 'அலை ஓசை' செய்திதாள், ' மக்கள் தொலைக்காட்சி' போன்றவற்றைத் தொடங்கி தமிழை வளர்த்தெடுத்தார். 1988-ம் ஆண்டு, கும்பகோணம் அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர் சமுதாயம் வசிக்கும் பகுதி வழியாகக் கொண்டு செல்ல எதிர்ப்பு கிளம்பவும், தானே நேரடியாகச் சென்று வன்னிய மக்களின் எதிர்ப்பையும் மீறி சடலத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்தார். இதன் காரணமாக, ராமதாஸை `தமிழ்க் குடிதாங்கி’ என்று அழைத்தார் தொல்.திருமாவளவன்.
1992-ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் `தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ நடத்தி, அதில் தமிழீழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த மாநாட்டையொட்டி நடந்த பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படத்தைப் பிடித்து தனித்தமிழீழத்துக்கு ஆதரவான முழக்கங்களும் அரங்கேற, "பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை” என்று கூறி, ராமதாஸ் உள்ளிட்டோரை தேசத்துரோக வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
இப்படியாக, ஆரம்பகாலத்தில் தமிழ்த் தேசிய வழியில் பயணித்த ராமதாஸ், காலப்போக்கில் தனது நிலைப்பாட்டைத் தளர்த்தி மீண்டும் சாதிய அரசியலுக்குள்ளாகவே தன்னைச் சுருக்கிக்கொண்டார்.

கட்சி தொடங்கிய சில மாதத்துக்குள், வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது பாமக. அந்தத் தேர்தலில், வெற்றி பெறவில்லை என்றாலும் 22,000 வாக்குகளைப் பெற்று மற்ற கட்சிகளைத் திரும்பி பார்க்க வைத்தது. பிறகு 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், போட்டியிட்ட 33 இடங்களிலும் தோல்வி அடைந்தது பா.ம.க. ஆனால் கட்சி தொடங்கி சில மாதங்களே ஆன சூழலிலும் தனித்து போட்டியிட்டு 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 6% வாக்குவங்கியை உறுதி செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
1991-ம் ஆண்டு திமுகவுடன் பாமக கூட்டணி வைத்து தோல்வி,
1996 -ம் ஆண்டு திவாரி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தோல்வி,
1998-ம் ஆண்டு அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐந்து இடங்களில் நான்கு இடங்களில் வெற்றி,
1999-ம் தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று எட்டு இடங்களில் ஐந்து இடங்களில் வெற்றி,
2004-ம் ஆண்டு திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆறு இடங்களில் வெற்றி,
2009-ம் ஆண்டு நடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று ஆறு இடங்களிலும் தோல்வி,
2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எட்டு இடங்களில் 1 இடத்தில் (தரும்புரி)மட்டும் வெற்றி,
2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட ஏழு இடங்களிலும் தோல்வியை தழுவிய பாமக-வின் நாடாளுமன்ற கூட்டணி இப்படியாக இருந்தது.

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., பண்ருட்டி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996-ம் ஆண்டு தேர்தலில், திவாரி காங்கிரஸ் உடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த பா.ம.க 116 இடங்களில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வென்றது.
2001-ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., 20 இடங்களில் வென்றது.
2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 34 இடங்களில் போட்டியிட்ட போட்டியிட்ட பா.ம.க., 18 இடங்களில் வென்றது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 30 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க மூன்று இடங்களில் மட்டுமே வென்றது.
2016-ம் ஆண்டு தேர்தலில், பா.ம.க-வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் பா.ம.க தனித்துப் போட்டியிட்டது. அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்த பா.ம.க 5.3% வாக்குவங்கியைப் பெற்றது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களை வென்றது. இப்படி பாமக தேர்தலிலும், கூட்டணியிலும் ஏற்ற இறக்கத்தை மாறி மாறி சந்தித்தது.
மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு கிராமங்களுக்கு சென்று மருத்துப் பணியை தொடங்கினார் அன்புமணி. அங்கு மக்கள்படும் கஷ்டங்களைப் பார்த்த அன்புமணிக்கு மருத்துவப் பணியைவிட பொதுப்பணி மீது ஆர்வம் வருகிறது. அதன் பிறகுதான் அவர் அரசியலில் அடி எடுத்து வைக்கிறார்.
2004 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்தது பாமக. ஒப்பந்தின்படி மாநிலங்களவை சீட்டிற்கு இரண்டு பெயர்களை முடிவு செய்து வைத்திருந்தார் ராமதாஸ். அவர்கள் திறம்பட பணியாற்றாததால் பாமக நிர்வாகிகள் இரண்டு சீட்டில் ஒரு சீட்டை அன்புமணிக்கு கொடுக்க சொல்லி வலியுறுத்தினர்.
ஆரம்பத்தில் வாரிசு அரசியல் என சொல்வார்கள் என்று அஞ்சிய ராமதாஸ் பின்பு ஒப்புக் கொண்டார். அன்புமணி மாநிலங்களவைக்கு செல்வது அதுவே முதல் முறை. இதற்கு முன் அவர் எம்.பி.யும் இல்லை. எம்.எல்.ஏ-வும் இல்லை. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்ற உடனேயே மத்திய அமைச்சர் பொறுப்பும் கிடைத்தது. 'தேசிய சுகாதார இயக்கம்', '108 ஆம்புலன்ஸ் திட்டம்' போன்றவை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அன்புமணியால் கொண்டு வரப்பட்டது.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தவிர்க்கும் தடை சட்டம், குட்கா மற்றும் பான்மசாலா தடை செய்ததிலும் அன்புமணிக்கு மிகப்பெரிய பங்குண்டு. மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது அன்புமணி பல்வேறு சுகாதார செயல்திட்டங்களை கொண்டு வந்தார். இதற்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தது அவரது தந்தை ராமதாஸ்தான். 1995 ஆம் ஆண்டு ராமதாஸ் ஆரம்பித்த பசுமை தாயகம் திட்டத்திற்கு முதலில் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அன்புமணியின் நிர்வாகச் செயல்பாடுகளைப் பார்த்த கட்சியினர் இளைஞர் அணி தலைவர் பொறுப்பைக் கொடுத்தனர்.
அதன் பிறகு 2004-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2014-ம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தர்மபுரி தொகுதியில் வெற்றிப் பெற்றார். அன்புமணி முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியது 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்தான். அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவி இருந்தாலும் 'மாற்றம், முன்னேற்றம் அன்புமணி' பிரசாரத்தை கையில் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

2016 தேர்தலில் தன்னை முன்னிலைப்படுத்திய அன்புமணி, சமீபமாக தன்னுடைய மனைவியையும் மகள்களையும் கட்சிக்குள் முதன்மைப்படுத்தினார். தர்மபுரியில் சௌமியா அன்புமணியை வேட்பாளராக நிற்கவைத்தார். தேர்தல் பிரசாரத்தில் தன்னுடைய மகள்களை இறக்கிவிட்டு அவர்களுக்கு வெளிச்சம் கிடைக்குமாறு செய்தார். இதற்கெல்லாம் செக் வைக்கும் வகையில்தான் ராமதாஸ் தன்னுடைய மகள் வழி பேரனான முகுந்தனை கட்சிக்குள் அழைத்து வந்து முக்கியத்துவம் கொடுத்தார். இந்தப் புள்ளியிலிருந்துதான் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான விரிசல் பெரும்பிளவாக மாறுகிறது.
சாதி அரசியல், தருமபுரி, மரக்காணம், பொன்பரப்பி போன்ற சாதிக் கலவரங்கள், ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறுவது, கட்சி ஆரம்பித்த புதிதில் செய்த சத்தியத்தை மீறி வாரிசு அரசியல் செய்து, தனது மகன் அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பா.ம.க இளைஞரணித் தலைவராகவும் ஆக்கியது என சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இருப்பினும் தமிழகத்தில் அதிகமான அம்பேத்கர் சிலைகளைத் திறந்தது, சமச்சீர் கல்வி, மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்கள், ஆரம்ப காலங்களில் பட்டியலின, தமிழ், இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து எடுத்த முன்னெடுப்புகள், தமிழ்மொழி, இனம், ஈழ ஆதரவு, மாநில உரிமை சார்ந்த போராட்டங்கள், கருத்துப் பிழைகள் இல்லாத முழ தகவல் உடைய அறிக்கைகள் ஒவ்வோர் ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை மற்றும் மாதிரி வேளாண் அறிக்கை வெளியிட்டு வருவது போன்ற பல கவனிக்கத்தக்க விஷயங்களை தமிழக அரசியலில் பா.ம.க செய்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதாரமாக வைத்து தொடங்கப்பட்ட சமயத்தில் பா.ம.க உன்னத நோக்கங்களை கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு இடதுசாரி இயக்கத்துக்குரிய தன்மைகள் அக்கட்சியிடம் இருந்தது. தேர்தல் அரசியல் எல்லாவற்றையும் மாற்றியமைத்துவிட்டது. மாறி மாறி கூட்டணி அமைத்து தொடர் தோல்விகளை சந்திக்கவே, தங்களின் பேர வலிமையை தக்கவைக்க மீண்டும் வன்னியர்களின் கட்சி என்கிற அடையாளத்துக்குள் தன்னை சுருக்கிக் கொண்டது.

திமுக, அதிமுகவுக்குப் பிறகு 3 வது பெரிய கட்சியாக பார்க்கப்பட்ட பா.ம.க, இன்றைக்கு தந்தை மகன் மோதலால் செங்குத்துப் பிளவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. பா.ம.கவின் எழுச்சியிலும் சரி, வீழ்ச்சியிலும் சரி ஏனைய கட்சிகளுக்கு நிறையவே பாடங்கள் ஒளிந்திருக்கிறது.!