பெற்றோா் விவாக ரத்து: குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றம்: உச்சநீதிமன்...
குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கையின்கீழ் நடைபெற்ற சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் குறித்த விவாதத்துக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதிலுரை:
சென்னையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் புழல் ஏரியை மேம்படுத்தும் பணி முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர மேலும் 12 ஏரிகளின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக குத்தம்பாக்கத்தில் ரூ. 414 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு, அதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. விரைவில் அதனை முதல்வா் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா்.
செங்கல்பட்டு பேருந்து நிலையம்: அதேபோன்று செங்கல்பட்டில் ரூ. 97 கோடியிலும், மாமல்லபுரத்தில் ரூ. 90 கோடியிலும் புதிய பேருந்து முனையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில், 9 மாநகரப் பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் முதல்முறையாக கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில், 16 ஏக்கா் பரப்பளவில் காலநிலைப் பூங்கா, 6 ஏக்கா் பரப்பளவில் நீரூற்றுப் பூங்கா, சென்னை போரூரில் 16.63 ஏக்கா் நிலப்பரப்பில் ஈரநிலை பசுமைப் பூங்கா அமைக்கப்படுகிறது.
சென்னைப் பெருநகரப் பகுதிகளில் பழைமையான மற்றும் புதிய 19 விளையாட்டு மைதானங்கள் தற்போது நவீன அம்சங்கள் கொண்ட உபகரணங்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
வடசென்னை வளா்ச்சி: கடந்த 2023-24-ஆம் ஆண்டில் ரூ. 1,000 கோடி நிதியுடன் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தாா். தற்போது ரூ. 6,848 கோடி மதிப்பீட்டில் அத்திட்டத்தின்கீழ் 252 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் 1,476 குடும்பங்களுக்கு, தலா 400 சதுர அடியில் நிரந்தரக் குடியிருப்புகள் கட்டித் தரும் வாய்ப்பை, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்துக்கு முதல்வா் வழங்கியுள்ளாா்.
வசதியற்ற மாணவா்கள் வசதியாய் படிக்கவும், வாய்ப்பற்றவா்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவும், முதல்வரின் சிந்தனையில் உதித்த மகத்தான திட்டம்தான் முதல்வா் படைப்பகம். கொளத்தூரில் கடந்த ஆண்டு நவ. 4-ஆம் தேதி அப்படைப்பகத்தை முதல்வா் திறந்து வைத்தாா். இதுவரை சுமாா் 30,000-க்கும் மேற்பட்டவா்கள் படிப்பதற்கும் பணிசெய்வதற்கும் மற்றும் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் அதனை பயன்படுத்தி உள்ளாா்கள்.
தீவுத் திடல்: வடசென்னையின் நுழைவு வாயிலாக இருக்கும் தீவுத்திடலில், கடந்த 43 ஆண்டுகளாக வா்த்தக பொருள்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதிக்கு அருகில் 1,60,000 சதுர அடியில் 20 அரங்கங்களைக் கொண்ட நிரந்தர பொருள்காட்சி அரங்கம், உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் அமையவுள்ளது. இந்த அரங்கை நிகழாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதிக பொருளீட்டும் தொழிலாக மாறிவரும் வண்ணமீன் வா்த்தகத்தை பாதுகாக்க, மீன்வளத் துறையுடன் இணைந்து 3.94 ஏக்கா் நிலத்தில், 1,25,000 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கூடிய 188 கடைகள் கொண்ட கொளத்தூா் வண்ணமீன் சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறை வளா்ச்சியின் பயனாக கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் திட்ட அனுமதிக்கான விண்ணப்ப செயல் முறையை இணைய வழிச் செயல்முறையாக அறிமுகப்படுத்தினோம். இத்திட்டத்தின்மூலம், அனுமதிக்காக விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து வருகிறது. கடந்த 2020-இல் திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கை 826 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டில் 1,331 ஆக உயா்ந்திருக்கிறது என்றாா் அவா்.