தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி
மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத்திரி திருநாளான புதன்கிழமை (பிப். 26) வரை மகா கும்பமேளா விழாவானது வெகுவிமா்சையாக நடைபெற்று நிறைவுற்றது.
மகா கும்பமேளாவின் வெற்றி குறித்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
அப்போது நாட்டின் ஒற்றுமையால் கிடைத்த சக்தி, இந்தியாவின் அமைதியைக் குலைக்க நினைத்த அனைத்துச் சக்திகளையும் ஆட்டம்காண வைத்துவிட்டது என்று கூறிய அவர், மகா கும்பமேளாவின்போது நாட்டின் பிரம்மாண்டத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பிரதமரின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | மகா கும்பமேளாவின்போது நாட்டின் பிரம்மாண்டத்தை உலகம் கண்டு வியந்தது: பிரதமர் மோடி
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "கும்பமேளா, நம்முடைய வரலாறு மற்றும் கலாசாரம் என்று பிரதமர் கூறியதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
ஆனால், கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி கூறவில்லை என்பதுதான் எங்களுடைய ஒரே புகார்.
மகா கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞர்கள் பிரதமரிடமிருந்து இன்னொரு விஷயத்தையும் எதிர்பார்க்கிறார்கள், அது வேலைவாய்ப்பு...
ஜனநாயகக் கட்டமைப்பின்படி, மக்களவையில் அனைவரும் இதுகுறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும், ஆனால் எங்களைப் பேச அனுமதிக்கமாட்டார்கள். இதுதான் புதிய இந்தியா" என்று கூறியுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி,
"எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்தை முன்வைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சிகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன.
எதிர்க்கட்சிகளும் இரண்டு நிமிடங்களாவது பேச அனுமதித்திருக்க வேண்டும்" என்றார்.
மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | குப்புறப்படுத்துத் தூங்குறீங்களா? அது நல்லதுதானா?