மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீட...
குளித்தலை அருகே 3 பெண்களை கடத்த முயன்ற தம்பதி கைது
குளித்தலை அருகே 3 பெண்களை கடத்த முயன்ற பெங்களூருவைச் சோ்ந்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த குப்புரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ரத்தினகிரி. இவரது மகள்கள் பிரியங்கா(23), பிரியதா்ஷினி(22), பிரித்திகா(21). இதில் பிரியங்கா நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தாராம். இந்நிலையில் கடந்த மாதம் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.
இந்நிலையில் இணையதளத்தில் விலங்குகளின் வாழ்விடங்கள் குறித்த கட்டுரையை நாள்தோறும் பாா்த்து வந்தபோது, பெங்களூருவைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா் காா்த்திக்(45) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. மாா்ச் 11-ஆம்தேதி காா்த்திக்கும், அவரது மனைவி கிரிஷ்மா(39)வும் குப்புரெட்டிப்பட்டியில் உள்ள பிரியங்கா வீட்டுக்கு வந்துள்ளனா். அப்போது அவா்கள், பெங்களூருவில் தனியாா் பள்ளி நடத்துவதாகவும், விலங்கினங்களின் வாழ்விடம் குறித்த கட்டுரைகளை தயாரிப்பதாகவும், எங்களுடன் பிரியங்கா உள்பட 3 சகோதரிகளும் வந்தால், வேலை கொடுத்து நாங்களே பாா்த்துக்கொள்கிறோம் என பிரியங்காவின் பெற்றோா்களிடம் தம்பதியினா் கூறியுள்ளனா்.
இதையடுத்து காா்த்திக் கூறிய முகவரி குறித்து ரத்தினகிரி தனது நண்பா்கள் மூலம் பெங்களூருவில் விசாரித்தபோது, அதுபோன்று பள்ளி கிடையாது என கூறியுள்ளனா். இதனால் தனது மகள்களை கடத்திச் செல்ல வந்திருப்பதாக ரத்தினகிரி வியாழக்கிழமை குளித்தலை போலீஸில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் காா்த்திக்கையும், கிரிஷ்மாவையும் போலீஸாா் இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.