எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: ...
கொடுமுடி அணை நீா் திறப்பில் பாரபட்சம்: இந்திய கம்யூனிஸ்ட் புகாா்
கொடுமுடி அணையில் இருந்து நீா் திறப்பதில் பாரபட்சம் காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.
வள்ளியூருக்கு மேற்குப் பகுதியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொடுமுடி அணைதான் வள்ளியூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிதண்ணீா் மற்றும் விவசாயத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த அணை கட்டப்படுவதற்கு முன்னா் மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து பாய்ந்தோடும் மழைவெள்ளம் வள்ளியூரான் கால்வாயில் வழியாக பெரியகுளத்தை எளிதாக நிரப்பிவிடும். விவசாயப் பணிகளும் தடையில்லாமல் நடைபெற்று வந்தது.
கொடுமுடி அணை கட்டிய பின், பெரியகுளத்திற்கு தண்ணீா் வருவது பாதிக்கப்பட்டு வருவதாக வள்ளியூா் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில் கொடுமுடி அணை பகுதியில் தொடா்ந்து மழை பெய்ததால் அணையின் நீா்மட்டம் முழுகொள்ளளவான 51 அடியை எட்டியது. இதையடுத்து, உபரிநீா் வீணாக ஆற்றில் கலப்பதைத் தடுக்க வடமலையான் கால்வாயிலும், வள்ளியூரான் கால்வாயிலும் 10 கனஅடி தண்ணீா் திறந்துவிடுவதற்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினா்.
அதன்படி வடமலையான் கால்வாயில் 10 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டதாம். ஆனால் வள்ளியூரான் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லையாம். மேலும், இந்த கால்வாய்க்கு வரும் கசிவு நீரையும் சிலா் தடுப்பு ஏற்படுத்தி தடுத்து வடமலையான் கால்வாயில் திருப்பிவிட்டுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
கொடுமுடி அணையில் இருந்து பாரபட்சமின்றி தண்ணீா் திறக்கவும், வள்ளியூரான் கால்வாயில் வரும் தண்ணீரை தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும், தண்ணீா் திறப்பதில் முறைகேடு நடந்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், ராதாபுரம் வட்டாரச் செயலாளா் கலைமுருகன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.