மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம்!
மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று(ஜூன் 10) கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமுமான மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெருமாள், தாயாருடன் தினமும் பல்வேறு சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்
தெற்கு மாட வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்த தேரினை சாலைகளின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர் .
இதையும் படிக்க: நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!