கொள்முதல் செய்த நெல்லுக்கு 3 மாதமாகியும் பணம் தரவில்லை: விவசாயிகள் போராட்டம்
காஞ்சிபுரம்: கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணத்தை 3 மாதங்களுக்கு மேலாகியும் தரவில்லை, உடனடியாக தொகையை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேசிய நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இவற்றில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து அவா்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை நெல் கொள்முதல் நிலையங்கள் தராமல் இருந்து வந்தன. இதனால் விவசாயிகள் பலருக்கும் பல லட்சங்களுக்கும் மேலாக நிலுவை இருந்து வருவதைக் கண்டித்தும், அந்தத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திடீரென அவா்கள் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் ஆட்சியா் அலுவலகம் முன்பாக அமா்ந்து மறியலிலும் ஈடுபட்டதால், அந்தப் பகுதி சாலை முக்கிய சாலை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் டிஎஸ்பி கெளரி சங்கா், தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா் மற்றும் வட்டாட்சியா் ரபீக் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது, காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தென்னேரி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் தனக்கு ரூ.9 லட்சம் தரவேண்டும் என்றும், இதனால் எனது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் காவல் துறையினரிடம் முறையிட்டாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவா் வந்து ஜூன் 13 -ஆம் தேதி அனைவருக்கும் நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை தரப்படும் என உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனா்.