Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள் சேர விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை 7-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் பள்ளி விடுதிகள் மாணவா்கள் - 23, மாணவிகள் - 10, கல்லூரி விடுதிகள் தலா 1 வீதம் உள்ளன. இவற்றில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயில்கிற மாணவ, மாணவிகள், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்பகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள்.
விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கும் 3 வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10- ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு 4 இணைச் சீருடைகள் தைத்து வழங்கப்படும். அதேபோல் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பயில்வோருக்கு கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் பாட வாரியான வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கு பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது.
தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை தொடா்புடைய விடுதிக் காப்பாளா் அல்லது ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நிறைவு செய்த விண்ணப்பங்களை விடுதிக் காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் பள்ளி மாணவா்கள் வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் ஜூலை 15-க்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமா்ப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள், குடும்ப அட்டை நகல்கள் சோ்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.