TN அரசு விடுதியில் கொடூரம்| VIJAY : TVK -ல் இணைந்த EX MLA-க்கள் IRS அதிகாரி|Impe...
கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து!
கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த எம்வி வான் ஹை 503 என்ற கப்பல், இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஜூன் 7 ஆம் தேதி புறப்பட்ட நிலையில், மும்பை துறைமுகத்துக்கு சென்றுகொண்டிருந்தது.
சுமார் 270 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் 22 பணியாளர்கள் இருந்த நிலையில், கொச்சியில் இருந்து 315 கி.மீ. தொலைவிலும் கோழிக்கோடு பேபூரில் இருந்து 70 கடல் மைல் தொலைவிலும் சென்றுகொண்டிருந்த போது, இன்று காலை 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து கப்பலில் இருந்த அனைவரும் கடலில் குதித்ததாக கூறப்படுகிறது. அவர்களின் 18 பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். அவர்களில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போன 4 கப்பல் ஊழியர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, மீட்புப் பணிகளுக்காக ஐஎன்எஸ் சூரத் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐஎன்எஸ் கருடாவில் இருந்து டோர்னியர் விமானமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், பலத்த காற்று வீசியதன் காரணமாக, அரபிக் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கப்பலில் இருந்த எரிபொருள் அடங்கிய கன்டெய்னர்களும் கடலில் மூழ்கிய நிலையில், மாநிலம் தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.