ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே
கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று, ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ஆட்சியின் 11 ஆண்டு சாதனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மோடி அரசாங்கத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் தெரிவித்ததாவது: ”கடந்த 11 ஆண்டுகளில், மோடி அரசாங்கம் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் கதவு வழியாக அரசாங்களை கவிழ்த்து, வலுகட்டாயமாக சர்வாதிகாரத்தை திணித்துள்ளது. மாநிலங்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளது மோடி அரசு. சமூகத்தில் வெறுப்பு, அச்சுறுத்தல்கள் மற்றும் பயத்தைப் பரப்ப தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பலவீனமான பிரிவினரின் மீதான சுரண்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் சம உரிமைகளைப் பறிக்கும் சதி தொடர்கிறது. மணிப்பூரில் நடைபெறும் முடிவில்லா வன்முறையே பாஜகவின் நிர்வாகத் தோல்விக்கு மிகப்பெரிய சான்றாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 8 ஆக இருந்த நிலையில், தற்போது பாஜகவும் ஆர்எஸ்எஸும் 5.6 விகிதமாக மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை என்ற வாக்குறுதிக்கு பதிலாக, கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன. பணவீக்கம் காரணமாக, பொதுமக்களின் சேமிப்பு 50 ஆண்டுகளில் மிகக் குறைவாகவும், பொருளாதார சமத்துவமின்மை 100 ஆண்டுகளில் மிக அதிகமாகவும் உள்ளது. பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி, திட்டமிடப்படாத பொது முடக்கம் மற்றும் அமைப்புசாரா துறையை கடுமையாகப் பாதித்து, கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலம் பாழாக்கப்பட்டது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, நமாமி கங்கே, 100 ஸ்மார்ட் சிட்டிகள் என அனைத்தும் தோல்வியடைந்தன. ரயில்வே நிர்வாகம் பாழடைந்தன. காங்கிரஸ் கட்டிய உள்கட்டமைப்பின் ரிப்பன்கள் மட்டுமே வெட்டப்பட்டுள்ளன. மோடி அரசாங்கம் கடந்த 11 ஆண்டுகளாக அரசியலமைப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் சர்வாதிகாரத்தின் மையைத் தேய்த்து வீணடித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.