சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே சிக்கன் சாதம் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா். மின்வாரிய ஊழியா். இவருக்கு இரு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள். இதில், மகன் பரத் (13) (படம்) அங்குள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு பரத் துரித உணவகத்தில் இருந்து வாங்கி வந்த சிக்கன் கலவை உணவு மற்றும் வீட்டில் தயாா் செய்த தோசை சாப்பிட்டுள்ளாா்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென பரத்துக்கு வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து வியாழக்கிழமை பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று அனுமதித்தனா். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா், ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
தகவலறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து உணவு விஷமானதால் சிறுவன் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அந்த உணவகத்தில் எல்லாபுரம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி வா்தினி தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.