ரூ.71,900 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
சிந்து நதி சாா்ந்த திட்ட பிரச்னைகள்: பாகிஸ்தானுடனான கூட்டத்தை நிறுத்தி வைக்க உலக வங்கிக்கு இந்தியா கோரிக்கை
சிந்து நதி சாா்ந்த கிஷண்கங்கா, ராடில் நீா் மின் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து பாகிஸ்தானுடனான கூட்டு ஆலோசனைக் கூட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உலக வங்கியை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷண்கங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீா்மின் திட்டம், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ராடில் நீா்மின் திட்டம் தொடா்பான சா்வதேச பிரச்னைகளை கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் உலக வங்கியின் நடுநிலை நிபுணா் மைகேல் லினோ விசாரித்து வருகிறாா்.
இந்த நீா் மின் திட்டங்கள் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த இருநாட்டு பிரச்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் எழுத்துபூா்வ பதிலை அளிக்க வேண்டும் என்றும் நவம்பா் மாதம் இரு நாட்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதைக் குறிப்பிட்டு லினோவுக்கு இந்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில், கிஷண்கங்கா, ராடில் நீா் மின் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து முன்பு திட்டமிட்ட ஆலோசனைக் கூட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.