சிரியா முன்னாள் அதிபரின் உறவினர் கைது!
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் - அஸாத்தின் உறவுக்கார சகோதரர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாத்தின் உறவினரான, வாசிம் படி அஸாத் என்பவர் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவரை தற்போது கைது செய்துள்ளதாக, அந்நாட்டு உள் துறை அமைச்சகம் இன்று (ஜூன் 21) தெரிவித்துள்ளது. இருப்பினும், அவரை எப்போது எங்கு கைது செய்தனர் உள்ளிட்ட தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இத்துடன், சிரியா நாட்டை ஆட்சி செய்து வந்த அஸாத் குடும்பத்தைச் சேர்ந்த வாசிம் அஸாத், அவர்களது ஆட்சியை ஆதரிக்க பிரிவிணைவாத கிளர்ச்சிப்படையை உருவாக்க பகிரங்கமாக அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்நாட்டில் நடைபெற்ற போதைப் பொருள் கடத்தலில் முக்கிய நபராக இவர் செயல்பட்டதால், அமெரிக்க அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு வாசிம் அஸாத்தின் மீது தடைகளை விதித்திருந்தது.
முன்னதாக, சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில், அந்நாட்டை 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அசாத் குடும்பத்தின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:நைஜீரியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல்! 10 பேர் பலி!