கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
"சேதுவோட அப்பா,அம்மாதான் எனக்கும் ரெண்டு பிள்ளைகளுக்கும் துணையா இருக்காங்க"- உமா சேதுராமன் பேட்டி
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி ஆனவர், நடிகர் சேதுராமன். 'வாலிபராஜா', 'சக்கை போடு ராஜா' என அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருந்தவரின், திடீர் மரணம் , திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டாக்டரான சேது, இளம் வயதிலேயே மாரடைப்பால் இறந்துபோனது யாரும் எதிர்பாராதது. கடந்த மார்ச்-26 ஆம் தேதி அவரது நினைவுநாள். 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அவரது குடும்பம் எப்படி உள்ளது? என அவரின் மனைவி உமா சேதுராமனிடம் பேசினேன்...
"வெளியுலகத்துக்கு சேது உயிரோடு இல்லாத மாதிரி தெரியலாம். ஆனா, அவர் உருவாக்கிட்டுப் போன க்ளினிக், வீடுன்னு எல்லாத்திலுமே உணர்வுப்பூர்வமாக நிறைஞ்சிருக்கார். அதனால, அவருடனான வாழ்க்கையை ஈஸியா மறந்துடவும் முடியாது; கடந்துடவும் முடியாது. மகள் சஹானா, மகன் வேதாந்த் எதிர்காலம் என் கைல இருக்கு. சோகத்தை உள்ளுக்குள்ள வெச்சிட்டு குழந்தைங்கக்கிட்டே போலியான முகத்தைக் காட்டினா கண்டுபிடிச்சுடுவாங்க. அது குழந்தைங்களுக்குப் பண்ற பெரிய துரோகம். ஏன்னா, நம்மைப் பார்த்துதான் அவங்க வளர்றாங்க. எந்த விதத்திலும் நம்ம சோகம் அவங்களை பாதிச்சிடக்கூடாது. அதுக்கு, ஒரே வழி அந்த சோகத்தையே வாழ்க்கையோட தன்னம்பிக்கையா மாற்றிக்கிறதுதான்.
'குறைந்த செலவுல தரமான மருத்துவம் அளிக்கணும். க்ளினிக்கை பெரியளவுல விரிவுப்படுத்தணும்'னு அடிக்கடி சேது சொல்லிக்கிட்டே இருப்பார். அவரோட கனவை என் மூலமா நிறைவேற்றிக்கிட்டுத்தான் இருக்கார். எங்க உலகத்துலதான் அவர் வாழ்ந்துட்டிருக்கார்னு சொன்னேன் இல்லையா?" என பெரும் தன்னம்பிக்கையோடு செம்ம போல்டாகவும் பேச ஆரம்பிக்கிறார்.
“நானும் சேதுவும் மீட் பண்ணி பத்து வருடங்கள் ஆகுது. ஆனா, இப்போ மீட் பண்ணினமாதிரியே இருக்கு. எங்களோடது அரேஞ்ச்டு மேரேஜ். அதனால, திருமணத்துக்கு அப்புறம்தான் லவ் பண்ணவே ஆரம்பிச்சோம். நான், ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர். அவர் மருத்துவர். ரெண்டு பேரோட துறை சார்ந்து நிறைய பேசிக்குவோம். நானும் அவரும் மீட் பண்ணின ஆறு மாசத்திலேயே திருமணம் நடந்து முடிஞ்சுடுச்சு. அதனாலதான் சொல்றேன், திருமணத்துக்கப்புறம்தான் முழுமையா லவ் பண்ண ஆரம்பிச்சோம்.
அவர், ரொம்ப ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு. எந்த விஷயமா இருந்தாலும் நேரடியா சொல்லிடுவார். அந்த குணம்தான் அவர்க்கிட்ட ரொம்ப பிடிச்சது. ஒரு விஷயம் பிடிக்கலைன்னா அதை செய்யமாட்டார். பிடிச்சிருந்தா என்ன எஃபோர்ட் வேணும்னாலும் போடுவார்.
அவருக்கு கிஃப்ட் கொடுக்கிறதெல்லாம் தெரியாது. அதனால, நான்தான் பிறந்தநாள், திருமணநாள்னு அவருக்கு கிஃப்ட், சர்ப்ரைஸ் எல்லாம் கொடுப்பேன். அவர்கிட்டே நான் பெருசா எதிர்பார்த்ததில்லை. ஆனா, திடீர்ன்னு அவருக்கு என்ன தோணுச்சுன்னு தெரியல. 2020-ஜனவரி என்னோட பிறந்தநாளுக்கு தங்க வளையல் கிஃப்ட் கொடுத்தார். அப்புறம், ரொம்ப காஸ்ட்லியான கம்ப்யூட்டர் வாங்கி ப்ரசண்ட் பண்ணினார். அதுதான், கடைசி கிஃப்ட்டா இருக்கும்னு நானும் எதிர்பார்க்கல; அவரும் நினைச்சிருக்கமாட்டார்.
எனக்கு எப்படி பாசக்கார கணவரோ; மகளுக்கு பேரன்புக்கார அப்பாவா இருந்தார். எங்களோட காதலுக்கு அடையாளமா மகள் சஹானா பிறந்தா. எவ்ளோ பிஸியா இருந்தாலும் அவளைப் பார்க்காம தூங்கமாட்டார். மகள்தான் அவருக்கு உயிரே. அவரோட இன்ஸ்டா பார்த்தாலே எவ்ளோ உயிரா இருந்தார்னு தெரியும்.
எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து, என்னையும் க்ளினிக்குக்கு கூட்டிக்கிட்டு போவார். அவர்க்கூட இருந்து ஹாஸ்பிட்டாலிட்டின்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன். 'நிதி மேலாண்மையில நீ அப்படியே எங்கம்மா மாதிரி'ன்னு பாராட்டிக்கிட்டே இருப்பார். ரெண்டாவதா, நான் கன்சீவ் ஆனதும் அவர் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஆனா, அதுக்குள்ள இப்படி ஆகும்னு யாருமே எதிர்பார்க்கல. இதுக்கே, டயட், எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை ஃபிட்டா வெச்சிருப்பார். அப்படியிருந்தும், இப்படி ஆனது ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.
பேஷண்ட் ஒருத்தருக்கு ஆபரேஷன் பண்ணும்போது தாலியை அடமானம் வெச்சுட்டு ஃபீஸ் கட்டினாங்க. அதை, தெரிஞ்சுக்கிட்ட சேது, அந்த காசு வேணாம்னு சொன்னதோடு அந்த தாலியை உடனே மீட்டு உங்க கழுத்துல போட்டுக்கணும்னு எக்ஸ்ட்ரா 5,000 ரூபாய் கொடுத்தனுப்பினார். சேதுவுக்கு அப்படியொரு மனசு. சேது எம்.பி.பி.எஸ். எம்.டி. ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட். பண ரீதியா இருந்தாலும் ஹாஸ்பிட்டலை சேவை மனப்பான்மையோடு செய்தார்.
என்னை இப்படித்தான் இருக்கணும் அப்படித்தான் இருக்கணும்னு எதுக்குமே ஃபோர்ஸ் பண்ணினது கிடையாது. இதையெல்லாம் விட ரொம்ப முக்கியமானது அவரோட எந்தப் படத்தையுமே நான் பார்த்ததில்ல.
படம் பார்க்கிற ஆர்வம் எனக்கு கொஞ்சம்கூட கிடையாது. ஆனா, என்னைக்குமே அவர் தன்னோட படத்தைக்கூட பார்க்கணும்னு ஃபோர்ஸ் பண்ணினதே கிடையாது. இப்போக்கூட பார்க்கல. அதுக்குக்காரணம், இப்போ பார்த்தா ரொம்ப ஃபீல் ஆகிவிடுவேன். பார்க்காதது, பார்க்காமலேயே போகட்டும்னு விட்டுட்டேன்.
மருத்துவமனையை விரிவுபடுத்தி, நியாயமான கட்டணத்துல தரமான ட்ரீட்மென்ட் பண்ணணும்ங்கிறதுதான் அவரோட கனவா இருந்தது. ஏற்கெனவே, ரெண்டு க்ளினிக் இருந்தது. மூணாவதா ஈ.சி.ஆர்ல ஒரு க்ளினிக் திறக்க முடிவு பண்ணினோம். அதுக்குள்ளதான் அவருக்கு இப்படி ஆகிடுச்சு. ஆனா, அவரோட கனவை நிறைவேற்றுவதற்காக நாங்க அந்த மூணாவது க்ளிக்கை ஓபன் பண்ணி சக்சஸ்ஃபுல்லா நடத்திக்கிட்டிருக்கோம். நினைவுநாள் வந்தா பலரும் சாமி கும்பிடுவாங்க, படைப்பாங்க, அவங்க அவங்க மதத்திற்கேற்ப அனுசரிப்பாங்க. ஆனா, நான் க்ளினிக்தான் போவேன்.

ஏன்னா, நானும் அவரும் க்ளினிக்லதான் அதிக நேரம் செலவழிச்சிருக்கோம். அங்கப்போயி உட்காரும்போதுதான் அவர்க்கூடவே இருக்கிற ஒரு ஃபீலிங் எனக்கு இருக்கும். பியூட்டி, ஸ்கின் அண்ட் ஹேர் உள்ளிட்ட ட்ரீட்மென்ட்லாம் பண்ணிக்கிட்டிருக்கோம். அவர் இல்லாத இந்த இழப்பை மாமியாரும் மாமனாரும்தான் ஒரு பெற்றோரா இருந்து பார்த்துக்கிறாங்க.
இப்பவும் சேதுவோட வீட்டுலதான் கூட்டுக்குடும்பமா இருக்கோம். குழந்தைங்களை ஸ்கூலுக்கு அனுப்புறது, பார்த்துக்கிறது எல்லாமே மாமியார்தான். நான், க்ளினிக் போயிடுவேன். சேது, இருக்கும்போது காட்டின அன்பைவிட இப்போ மாமியாரும் மாமனாரும் அதிகமான அன்பைக் காண்பிக்கிறாங்க. இப்படியொரு நல்ல குடும்பத்துக்கு மருமகளா வந்ததுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்ன புது விஷயம் பண்ணினாலும் எங்க மாமியார் ரொம்பவே என்கரேஜ் பண்ணுவாங்க.
என் மாமனார் விஸ்வநாதனும் ஃபேமஸ் டாக்டர்தான். அவர்தான், Zi Clinic-க்கை பார்த்துக்கிட்டு வழிநடத்துறார். சேது, எப்பவுமே இந்த க்ளினிக்குல எங்களோடுதான் வாழ்ந்துக்கிட்டிருக்கார். அதனாலதான், அவருக்காக நினைவுநாளில் வீட்ல இருக்கிறதைவிட இங்க அதிகநேரம் டைம் ஸ்பெண்ட் பண்றேன். அதைத்தான் அவரும் விரும்புவார்” என போல்டாக பேசி நம்மை உருவைக்கிறார் உமா சேதுராமன்.