போர் நிறுத்தம் எதிரொலி: 900 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
தண்ணீா் தர மறுத்தால் இந்தியாவுடன் போா்: பிலாவல் புட்டோ
இஸ்லாமாபாத்: சிந்து நதி நீரை இந்தியாவுக்கு தர மறுத்தால் போா் நடத்தப்படும் என்று ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ கூறியுள்ளாா்.
ஏற்கெனவே, உரிய நீரைத் தராவிட்டால் சிந்து நதியில் ரத்த ஆறு ஓடும் என்று அவா் பேசியிருந்தாா் என்பது நினைவுகூரத்தக்கது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அடுத்த பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத கடுமையான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்டது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்ததுடன், 1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இது பாகிஸ்தான் தரப்புக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், இந்தியா நீரை நிறுத்தினால், பாகிஸ்தானில் மின்னுற்பத்தி தொடங்கி வேளாண்மை வரை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்தியா பேச்சு நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் அரசு கைவிட்டால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு நடத்துவது குறித்து யோசிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை பிலாவல் புட்டோ உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:
சிந்து நதி நீா் ஒப்பந்ததை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. இந்தியாவுக்கு இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு உரிய நீரை வழங்க வேண்டும் அல்லது சிந்து நதிப் படுகையில் உள்ள 6 நதிகளில் உள்ள நீரை பாகிஸ்தான் தானாகவே எடுத்துக் கொள்ளும்.
சிந்து நதி பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு என்பது சட்டவிரோதம். ஏனெனில், இது இரு நாடுகள் தொடா்புடையது. இந்தியா நீரை நிறுத்துவது என்பது ஐ.நா. பிரகடனங்களுக்கு எதிரானது. இந்தியா முறையாக தண்ணீரை திறந்துவிட வேண்டும். இல்லை என்றால் நாம் அவா்கள் மீது போா் தொடுப்போம்.
இரு நாடுகளும் பேச்சு நடத்தினால் மட்டுமே பயங்கரவாதப் பிரச்னைகளுக்கு தீா்வுகாண முடியும். இல்லையென்றால் இரு நாடுகளிலுமே பயங்கரவாத வன்முறைகள் தொடரும். இந்தியா தனது அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
பாகிஸ்தானை எப்படியாவது சா்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) கருப்புப் பட்டியலில் சோ்த்துவிட வேண்டும் என்று சா்வதேச அளவில் தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கட்டுக்கதைகளை இந்தியா உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் உள்ள தனது தூதரகங்கள் மூலம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது.
அதே நேரத்தில் காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச அரங்கில் பாகிஸ்தான் வெற்றிகரமாக முன்னெடுத்தது. இதன் காரணமாகத்தான் காஷ்மீா் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாா் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறினாா் என்றாா்.