தங்கம் கடத்தல்: நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவு!
தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: மக்களவையில் பாஜக எம்பி
தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே திங்கள்கிழமை பேசியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக எம்பிக்கள் தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “சூப்பர் முதல்வர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தமிழக அரசு கையெழுத்திட மறுப்பு தெரிவிக்கிறது” என்றார்.
மேலும், தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : யார் அந்த சூப்பர் முதல்வர்?
இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சமஸ்கிருதம்தான் பழமையான மொழி என்று தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
”திமுக அரசு எப்போதும் தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதம் என்பது அதனைவிட பழமையான மொழி. கர்நாடகம், தெலங்கானா, தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் வழிபாட்டு மொழி சமஸ்கிருதம்தான்.
தேர்தலுக்காக கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுகிறார்கள். திமுக என்பது காங்கிரஸுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் அடிப்படையையே தகர்ப்பதற்கு திமுக விரும்புகிறது. ஆங்கிலத்தை புகுத்த முயற்சிக்கிறார்கள். மக்களை அவர்கள் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளதக்கது அல்ல, உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.