தங்கம் கடத்தல்: நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவு!
தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக ரூ. 12 கோடியிலான தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 3 நாள்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கம் கடத்தல் விவகாரத்தில் அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ரன்யா ராவ் இன்று(மார்ச் 10) ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் மார்ச் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்படுவார். எனினும், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு செவ்வாய்க்கிழமை(மார்ச் 11) விசாரணைக்கு வருகிறது.