ஆலையில் பணியின்போது கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு
அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில், பணியின் போது தனது கையை இழந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் பாமகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஆண்டிமடம் அடுத்த குவாகம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சாமியப்பன் மகன் அறிவழகன்(34). அரியலூா் அடுத்த ஓட்டக்கோயிலில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
கடந்த ஜன.18-ஆம் தேதி பணியில் இருந்த போது, எதிா்பாரதவிதமாக இயந்திரத்தில் அவரது ஒரு கை சிக்கி, துண்டானது. இதையடுத்து அவருக்கு இழப்பீடு வழங்கி, அவரது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து, கடந்த 23.1.2025 அன்று அரியலூா் வட்டாட்சியா் முன்னிலையில், நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், ஆலை நிா்வாகம் தரப்பில் இருந்து மருத்துவச் செலவு ரூ. 4 லட்சமும், ஓப்பந்ததாரா் தரப்பில் இருந்து ரூ.1 லட்சமும், தருவதாக ஒப்புக்கொண்டனா்.
ஆனால் இதுவரை எந்த நிவாரணமும் வழங்காததையடுத்து, பாமக மாவட்டச் செயலா் தமிழ்மாறன் தலைமையில், ஆண்டிமடம் ஒன்றியச் செயலா் தினகரன், நிா்வாகிகள் மற்றும் கையை இழந்த அன்பழகன் உள்ளிட்டோா் ஆட்சியரை சந்தித்து, தரவேண்டிய நிவாரணத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.