"கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு... ஓட்டுநரை காலணியால் அடித்த மேலாளரை கைதுசெய்க" -...
தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலர் பதவி!
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலத்தில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த அருண்ராஜ், சமீபத்தில் விருப்ப ஓய்வுபெறுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஐஆர்எஸ் பணியில் இருந்து இவரை மத்திய அரசு விடுவித்தது.
இந்த நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில், அருண்ராஜுக்கு மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ”இவர் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படி, கட்சிக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்” என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல், அதிமுக, திமுக கட்சிகளின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதி உள்ளிட்ட பலர் தவெகவில் இன்று இணைந்துள்ளனர்.
புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:
1. ஆர். ராஜலட்சுமி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
2. எஸ். டேவிட் செல்வன், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்
3. ஏ. ஸ்ரீதரன், திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
4. என். மரிய வில்சன், நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
5. சி. சுபாஷ், முன்னாள் நீதிபதி, தமிழ்நாடு மாநில ஜூடிசியல் சர்வீஸ், சென்னை