தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழா மற்றும் உணவுத் திருவிழா 2025..!
``திமுக தலைமைக்கும் தொண்டர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது'' - ஆர்.பி.உதயகுமார்
"ஒருவரை ஒருவர் தாக்கினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், காவல் நிலையத்தையே தாக்கினால் எங்கே போய் புகார் அளிப்பது?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.கண்ணியம்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவில் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கிய ஆர்.பி.உதயகுமார் செயதியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், தற்போது காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை, ஏற்கெனவே செல்லம்பட்டி பகுதியில் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டார், இன்று காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருவரை ஒருவர் தாக்கினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், காவல் நிலையத்தையே தாக்கினால் எங்க போய் புகார் அளிப்பது? காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும், இதுதான் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

உழைக்கின்ற உத்தமராக உதயநிதியை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்காக சுற்றுப்பயணம் வருகிறார்கள். அப்பா ஒருபுறம், மகன் ஒருபுறம் சுற்றி வந்து விளம்பரம் செய்கிறார்கள்.
நான்கு ஆண்டுகளில் செய்ய முடியாததை இனிமேல் இருக்கும் 6 மாதங்களில் எப்படி செய்ய முடியும்? விளம்பரத்திற்காக ஊர் சுற்றி வருவதால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.
`உடன்பிறப்பே வா' என்ற நிகழ்ச்சியை தொகுதி வாரியாக நடத்தும் ஸ்டாலின் உசிலம்பட்டி தொகுதியினரை முதலில் அழைத்த ஸ்டாலின், திமுக தொடங்கிய காலத்திலிருந்து ஒரு முறை கூட உசிலம்பட்டியில் சூரியன் உதிக்கவில்லையே என்று கேள்வி எழுப்பி உள்ளார். உசிலம்பட்டி எப்போதுமே இரட்டை இலையை, எம்ஜிஆரை நேசிக்கிற மக்கள் உள்ள தொகுதி என்பதால் பல ஆண்டுகளாக அதிமுக வெற்றி வாகை சூடி வருகிறது, இனிமேலும் வெற்றி வாகை சூடும்.
எத்தனை முறை உடன்பிறப்பே வா என்று அழைத்தாலும் பலனில்லை, தலைமைக்கும் தொண்டர்களுக்கு மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.
தங்க காசுகளை கொட்டி கொடுத்து உடன்பிறப்புகளை சரி செய்துவிட்டு, மக்களிடம் இந்த ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்து விடலாம் என்றுதான் இந்த நாடக கம்பெனி நினைக்கிறது. அவர்கள் நடத்துகிற நாடகத்தை நம்ப தமிழ்நாட்டில் ஆள் இல்லை. அதிலும் உசிலம்பட்டி தொகுதியில் ஆளே இல்லை" என்றார்.