உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் விருதுநகர்; அனுபவம் பகிரும் ஆட்...
கல்லணை, ரோடு ஷோ, சிலை திறப்பு, நலத்திட்ட உதவி.. முதல்வரின் தஞ்சாவூர் விசிட்
கடந்த 12 - ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டெல்டா குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்நிலையில், தஞ்சையில் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தஞ்சைக்கு வருகை தந்தார். 15 - ம் தேதி மதியம் திருச்சிக்கு விமானம் மூலம் வந்த அவரை, அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றார்.
அதனைத்தொடர்ந்து, கார் மூலம் கல்லணைக்குச் சென்ற அவர், அங்குள்ள நீர்வள ஆதாரத்துறையின் ஓய்வு இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்.

அதன்பிறகு, ஓய்வு அறையில் இருந்து 200 மீட்டர் தூரம் நடந்து வந்து கல்லணையில் இருந்து பிரியும் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் டெல்டா குறுவை சாகுபடிக்காக மலர் தூவி தண்ணீர் திறந்தார்.
இதற்கு முன்பு கடந்த 1998 - ம் வருஷம், ஜூன் 23 - ம் தேதி அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கல்லணையை திறந்திருக்கிறார். அதன்பிறகு, தந்தை வழியில் இரண்டாவது முதல்வராக கல்லணையை திறந்திருக்கிறார்.
அதன் பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டி, தஞ்சாவூர் என்று பல பகுதிகளில் முதல்வர் 'ரோடு ஷோ' நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூர் ராமநாதனில் இருந்து காரில் இருந்து இறங்கி இருமங்கிலும் நின்றிருந்த மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு நடந்தே பழைய பேருந்து நிலையம் வரை சென்றார்.
இரவு 9.30 மணிக்கு, பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததோடு, அருகில் இருந்த கலைஞரின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அவருக்கு வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது. இரவு ஓய்வெடுத்தவர், இன்று தி.மு.க தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ இல்ல திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதையடுத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முதல்வரின் தஞ்சாவூர் விசிட்டுக்காக கட்சியினர் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தனர்.