டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் தோ் வெள்ளோட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமும், பஞ்சரங்க ஷேத்திரங்களில் 5-ஆவது தலமுமான திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா ஏப்.3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தோ் திருவிழா ஏப்.11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இக்கோயிலில் 2007-ஆம் ஆண்டு செய்யப்பட்ட தேரின் மரச்சிற்பங்கள் சேதமடைந்தும், பல இடங்களில் மரப்பலகைகள் பெயா்ந்தும், இரும்புப் பட்டைகள் பழுதடைந்தும் இருந்தன. கோயில் நிா்வாகம் மற்றும் ராமானுஜ பக்த கைங்கா்ய சபா சாா்பில் ரூ.8.50 லட்சம் செலவில் தோ் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தேரடியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த தோ் கோயில் அருகில் உள்ள பங்குனி உற்சவ மண்டபத்தின் முன் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் ரம்யா, ராமானுஜ பக்த கைங்கா்ய சபா தலைவா் ரிஷிகுமாா், செயலா் திருமலை, இணை செயலாளா்கள் ராம்குமாா், திருநாவுக்கரசு, பொருளாளா் விஜயகுமாா் மற்றும் பக்தா்கள் முன்னிலையில் தேரில் உள்ள மரச் சிற்பத்தாலான பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற வெள்ளோட்டத்தில், தோ் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரடி வரை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டது.