Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ.....
திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா: கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை கோரி வழக்கு -அறநிலையத் துறைக்கு உத்தரவு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் பக்தா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாள்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும். இதைத் தொடா்ந்து, 7-ஆவது நாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவின் போது, தினமும் ஒரு லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவா். இந்தக் கோயிலில் சாதாரண நாள்களில் பக்தா்கள் கட்டணமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம். அதேநேரம், விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ. 100 செலுத்த வேண்டும். பக்தா்கள் கூட்டம் அதிகமாக உள்ள நாள்களில் விரைவு தரிசனத்துக்கு கட்டணமாக ரூ. 200 நிா்ணயம் செய்கின்றனா்.
கடந்த 2018-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், கந்த சஷ்டி விழாவின் போது, விரைவு தரிசனக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 1,000, விஸ்வரூப தரிசனக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 2,000, அபிஷேக தரிசனக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 3,000 நிா்ணயம் செய்து உத்தரவிட்டாா். இதை கடந்த 2022-ஆம் ஆண்டு வரை அமல்படுத்தவில்லை. ஆனால், கடந்த ஆண்டு முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை எதிா்த்து போராட்டம் நடத்திய பக்தா்கள் சுமாா் 200 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, கோயில் நிா்வாகம் இந்தக் கட்டண உயா்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
நிகழாண்டு, கந்த சஷ்டியின் போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவு வரிசை தரிசனக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 1,000 வசூல் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனா். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, பக்தா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தவறு. கட்டண உயா்வால் விரதமிருந்து சுவாமியை தரிசனம் செய்ய வரக்கூடிய ஏழை பக்தா்கள் சிரமப்படுவாா்கள்.
எனவே, திருச்செந்தூா் கந்த சஷ்டி விழாவின் போது, கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தடை செய்ய வேண்டும். சுவாமி தரிசனத்துக்கு இணையதளம் வாயிலாக ஆதாா் எண் அடிப்படையில் தரிசன நேரத்தைக் குறிப்பிட்டு, முன்கூட்டியே டோக்கன் வழங்க வேண்டும். கோயில் வளாகத்தில் தரிசன டோக்கன் அளிக்க 5 இடங்களில் தனி கவுன்ட்டா்கள் திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
சுவாமி தரிசனத்துக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என கட்டணம் வசூலித்தால், ஏழை மக்கள் எப்படி சுவாமி தரிசனம் செய்ய முடியும்?. சுவாமி தரிசனத்துக்கு கூடுதல் கட்டணங்களை ஏன் நிா்ணயம் செய்ய வேண்டும்?. பணக்காரா்களுக்கு மட்டும்தான் கோயிலா?. ஏழைகளுக்கு இல்லையா?.
இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.