கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
``திருமணம் செய்ய மரபணு பொருத்தம் அவசியம்..'' - பெங்களூரில் புதிய கலாசாரம்; ஏன் தெரியுமா?
திருமணத்துக்கு இப்போது ஜாதக பொருத்தத்தை தாண்டி மரபணு பொருத்தம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. பொதுவாக நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்வது கிடையாது. அப்படி திருமணம் செய்தால் மரபணு பிரச்னையால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ஆண், பெண் இருவருக்கும் மரபணு சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதில் கர்நாடகா மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கர்நாடகாவில் 27 சதவீதம் பேர் ரத்த சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொள்கின்றனர். எனவே மரபணு சோதனை செய்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் பிரபலம் அடைந்து வருகிறது.
நவீன தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் பெங்களூரில், திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது படிப்பு, வேலை, குடும்ப பின்னணி குறித்து ஆய்வு செய்த பிறகு ஜாதகம் பார்க்கின்றனர். அதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மரபணு சோதனை செய்து கொள்கின்றனர்.
இது போன்று மரபணு பரிசோதனை செய்து கொண்ட நெருங்கிய உறவினர்களான கீர்த்தி மற்றும் அர்னாப் இது பற்றி கூறுகையில்,'' எங்களது மகப்பேறு மருத்துவர், நாங்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பதால் மரபணு மாற்றம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அது போன்று ஒரே மாதிரியான மரபணு மாற்றங்களை கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை மரபணு குறைபாடு அல்லது உடல்நலக்குறைபாட்டுடன் பிறக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். எனவே எங்களுக்கு பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் பிறக்குமா என்பதை தெரிந்து கொள்ள மரபணு சோதனை உதவியது'' என்றார்.

இது போன்ற மரபணு சோதனை செய்து கொள்ள 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இச்சோதனை குறித்து பெங்களூருவில் மகப்பேறு மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் மீனாட்சி கூறுகையில், ''அமெரிக்கா போன்ற நாடுகளில் மரபணு சோதனைக்கும் சுகாதார காப்பீடு பாலிசிகள் உண்டு. ஆனால் இந்தியாவில் அத்தகைய காப்பீட்டு வசதியில்லை. பொதுமக்கள் இது போன்ற மரபணு சோதனை எடுத்துக்கொள்ள பயப்படுகின்றனர்.
உறவினர்களுக்குள் திருமணம் செய்யும் போது ஒரே மாதிரியான மரபணு மாற்றம் இருந்தால் திருமணம் செய்ய முடியாமல் போய்விடும் என்று நினைக்கின்றனர். பொதுமக்களிடம் இது தொடர்பாக தவறான கருத்துகள் இருக்கிறன. மரபணு சோதனை செய்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்'' என்றார்.
இது போன்ற சோதனைகளை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்து கொடுக்கலாம் என்று சில டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெங்களூரை சேர்ந்த டாக்டர் சந்தியா ராணி கூறுகையில், ''நெருங்கிய உறவினர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது இது போன்ற சோதனைகளை செய்து கொள்ளும்படி நாங்கள் பரிந்துரைக்கிறோம். இச்சோதனை மூலம் தம்பதிகள் அடுத்து வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள வசதியாக இருக்கும். மரபணு ஒரே மாதிரியாக இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை கூடுதல் விரல், சிறுநீரகம் வீக்கம், இருதயத்தில் துளை போன்ற சரி செய்யக்கூடிய பிரச்னைகளுடன் பிறக்கலாம். அதேசமயம் முதுகெழும்பு பிரச்னை, தீவிர இருதய கோளாறு போன்ற பிரச்னை ஏற்பட்டால் சரி செய்வது மிகவும் சிரமம்'' என்று தெரிவித்தார்.
பெங்களூரில் அதிகரித்துள்ள இந்த மரபணு பொருத்தம் கலாச்சாரம் விரைவில் தமிழகத்திலும் பிரபலமாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.