ரியாத்துக்கு திருப்பி விடப்பட்ட தில்லி-பர்மிங்காம் ஏர் இந்தியா விமானம்
துப்பாக்கி கைமாறாது! ஜனநாயகன் பிறந்தநாள்!
வெற்றி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகுக்கு வெற்றிப் படங்களை அள்ளிக் கொடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவராகவும் வலம் வரும் விஜய், தனது 51-ஆவது வயதைத் தொடவுள்ளார்.
விலை போகாத மூஞ்சி என்று விமர்சிக்கப்பட்டவர்தான், இன்று தமிழ்த் திரையுலகில் அதிகளவில் விலைபோகும் படங்களை ஆண்டுதோறும் அள்ளித் தருகிறார். நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும், ரசிகன் படத்தின் மூலமாகவே பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக உருவெடுத்தார்.
பாக்ஸ் ஆஃபிஸுக்கு போட்டிப்போடும் திரையுலகில், அதனை தனக்கான தனிப்பட்ட ஆஃபிஸாகவே விஜய் வைத்துக் கொண்டிருப்பது கோலிவுட் அறிந்ததே. அந்த வகையில், விஜய்யின் திரையுலகு பயணம் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும், அதனை உச்சத்துக்கு கொண்டுவந்த படங்களாக துப்பாக்கி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களைக் கூறலாம்.

துப்பாக்கி
வெளியீட்டில் பிரச்னையான தளபதி விஜய்யின் முதல் படம், துப்பாக்கி. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ராணுவ வீரராக உருவெடுத்த விஜய், நாட்டினுள் அசம்பாவிதத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகளை அழிக்கும் தனியொரு வீரனாக (One-Man Army) மாறுகிறார்.
படத்தில் தோன்றும் பயங்கரவாதிகளுக்கு குறிப்பிட்ட மதத்தின் சாயத்தைப் பூசியதாக, சிலர் சர்ச்சைகளை ஏற்படுத்தினர். பயங்கரவாதிகளுக்கு மதச் சாயம் பூசியதாகக் கூறும் சிலர், நாட்டைக் காக்கும் ராணுவ வீரர் ஒருவரும் அதே மதத்தின் சாயம் கொண்டிருப்பதைக் கூற மறுப்பதுதான், நிகழ் அரசியல்.

கத்தி
துப்பாக்கியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் இரு வேடங்களில் விஜய் நடித்த படம்தான் கத்தி. பெயருக்கு ஏற்றாற்போலவே, கதையும் சரி, கதைநாயகனும் சரி - கூர்மைதான்.
நண்பரின் பர்ஸையே களவாடும் திருடனாகத் தோன்றும் கதாநாயகன், உதவியற்ற விவசாயிகளுக்கான தலைவனாக தடம்விட்டுச் செல்லும் படமாக அமைந்ததுதான், கத்தி.
விவசாயிகளை நசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் கத்தி என்கிற கதிரேசன், சண்டைக் காட்சிகள், நடனம், கார்ப்பரேட் அரசியல் என அனைத்திலும் கலக்கியிருப்பார். இந்தப் படத்தில் மாநிலக் கட்சிக்கு எதிரான வசனம் இடம்பெற்றதுதான், விஜயின் அரசியல் வசனங்களுக்கு வித்திட்டது எனலாம்.

மெர்சல்
இளைய தளபதியாக இருந்த விஜய், தளபதியாக உருமாறியது மெர்சல் படத்திலிருந்துதான். இயக்குநர் அட்லி இயக்கத்தில், 3 வேடங்களில் நடித்த விஜய்யின் அரசியல் வசனங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தின.
மருத்துவத்தை சேவையாக அல்லாமல், வியாபாரமாக மாற்றும் வணிக அரசியலை மெர்சல் வெளிக்கொண்டு வந்தது. இன்றைய படங்களில் ரெட்ரோ பாடல்கள் வைக்கப்படுவதற்கு விதை போட்டது மெர்சல்தான். மெர்சலில் எம்.ஜி.ஆர். பாடல் வைக்கப்பட்டதில் இருந்து ஆரம்பித்ததுதான், விஜய்யின் அரசியல் பயணம் என்றுகூட கூறலாம்.
துப்பாக்கியை கைமாற்ற தளபதி விஜய் விரும்பினாலும், கைமாறுவதற்கு துப்பாக்கி என்னவோ மறுக்கத்தான் செய்கிறது.