கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்த காங்கிரஸ்!
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட்டிருந்தது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து அடுத்தாண்டு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்திருந்தார்.
இதனிடையே, மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்காததால் அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு புகழாரம்
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, கருணாநிதியும் விஜயகாந்தும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிரேமலதா புகழாரம் செலுத்தியுள்ளார்.
”இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.