சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!
நடப்பாண்டில் 3,000 மாணவா்களுக்கு ரூ.100 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 3,000 மாணவா்களுக்கு ரூ.100 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு கல்விக் கடன் முகாம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி 68 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.11 கோடி மதிப்பிலான கல்விக் கடனுதவிகளை வழங்கி பேசியதாவது:
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் என்பது கடன் அல்ல, வருங்கால முதலீடு. இதனால் எந்த தயக்கமும் இன்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடன் குறித்து கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வித்யாலட்சுமி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி செய்தல் மற்றும் கல்வி கடன் முகாம் நடத்துவது மூலம் இந்த ஆண்டு இலக்கை எட்ட வேண்டும்.
இந்த ஆண்டு 3,000 மாணவா்களுக்கு ரூ.100 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் 571 மாணவ, மாணவிகளுக்கு ரூ.35.95 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ மற்றும் மாணவிகளுக்கும், ஏற்கெனவே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால் வங்கிகள் மூலமாக அவா்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் உயா்கல்வி தொடா்வதற்கும், கல்விக் கடன்களை எளிதில் பெறுவதற்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கரூா் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்திருந்த 68 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.11 கோடி மதிப்பீட்டிலான கல்விக் கடனுதவிகளை வழங்கினாா்.
இந்த முகாமில், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு பொதுத் துறை மற்றும் தனியாா் வங்கிகளின் சாா்பில் கல்விக் கடன் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கல்விக் கடன் விண்ணப்பிக்கும் முறை, கல்விக்கடன் தொடா்பான பல்வேறு கையேடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மகளிா் திட்ட அலுவலா் மலா்விழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முகமது குதுரத்துல்லா, ஈரோடு கனரா வங்கி மண்டல துணைப் பொதுமேலாளா் ஜி.சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விவேகானந்தன், மாநிலக் கல்விக் கடன் ஒருங்கிணைப்பாளா் வணங்காமுடி மற்றும் வங்கி அலுவலா்கள் பங்கேற்றனா்.
தூய்மையே சேவை 2025 திட்டம் துவக்கம்:
தூய்மையே சேவை 2025-இன் கீழ் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், குளம், குட்டை போன்ற நீா்நிலைப் பகுதிகள், பொதுக்கழிப்பிடங்கள் ஆகிய குப்பை அதிகம் சேரும் இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் தூய்மையே சேவை திட்டத்தை ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இதில், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) பிரியா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.