Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
நன்னீர் மீன்களுக்கு என்ன ஆனது? நம் வீட்டுக் கிணறுகளிலும் மீன்கள் இருந்தனவே; ஆனால், இன்று?
நீருக்குள் இருந்து மேலே தாவி, தாமரைப்பூவின் இதழ்களைக் கடிக்கும் மீன்களின் ரீல்ஸை மில்லியன் கணக்கில் பார்க்கிறோம். ஆனால், நம்மைச் சுற்றி இருக்கிற நீர் நிலைகளில், மீன்களும், தவளைகளும், நீர் வாழ்த்தாவரங்களும், இவற்றுடன் தும்பிகளும் வாழ்கின்றனவா என்று சமீபத்தில் கவனித்திருக்கிறோமா..? ஒருமுறை உற்று கவனித்தால், அந்த அழுக்கு நீர் நிலைகளுக்குள் ஆங்காங்கே இருக்கிற சில மீன்களுக்கு பேசத் தெரிந்தால், 'தாங்கள் மெள்ள மெள்ள அழிந்துக்கொண்டிருப்பதை' நம்மிடம் சொல்லும்.

உலகம் முழுக்க இருக்கிற நன்னீர் மீன்களில் 24 சதவிகிதம், அதாவது கிட்டத்தட்ட கால் பங்கு அழிவின் விளிம்பில் இருப்பதாக, சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature - IUCN) பதறிக்கொண்டிருக்கிறது. இதில், இந்தியாவில் இருக்கிற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருக்கிற நன்னீர் மீன்களையும் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறது, அந்த சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம். கூடவே நன்னீர்களில் வசிக்கும் நண்டுகளும், நீர்நிலைகளின் அருகே வாழும் தும்பிகளும், மனிதர்களால் அழிந்துக் கொண்டிருக்கின்றன என, அந்த ஒன்றியம் உலகம் முழுக்க தன்னுடைய எச்சரிக்கையை பதிவு செய்திருக்கிறது.
என்ன நடந்துக்கொண்டிருக்கிறது நன்னீர் மீன்களுக்கு..? இயற்கை ஆய்வாளர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்களிடம் கேட்டோம்.

''நல்ல நீர் ஓடுகிற நீர் நிலைகளையே நம்முடைய அடுத்தத் தலைமுறைக்கு நாம் விட்டு வைக்கவில்லை. அவற்றில், வாழும் நன்னீர் மீன்களை மட்டும் நம் பிள்ளைகளுக்கு விட்டு வைப்போமா என்ன'' என்றபடி பேச ஆரம்பித்தார் அவர்.
''ஆற்று மீன், ஏரி மீன், குளத்து மீன் எல்லாமே நன்னீர் மீன்கள்தான். நம்மைச்சுற்றி நிறைய நீர் நிலைகள் இருந்த காலத்தில், சிறுவர்கள் விளையாட்டாக வீட்டுக்கு அருகே இருக்கிற குளத்தில் இருந்து மீன்களைப் பிடித்து வந்து கிணற்றில் போட்டு விடுவார்கள். ஆக, நம் வீட்டுக் கிணறுகளிலும் மீன்கள் இருந்தன ஒருகாலத்தில்.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கிற நீலகிரி உயிர்ச்சூழலில் இருக்கிற மீன்களில், இதுவரை 226 வகை நன்னீர் மீன்களை ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை, உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது என்கிறார்கள் அவர்கள். அதாவது, இங்கிருப்பவை ஓரிட வாழ்வி நன்னீர் மீன்கள். பொதுவாக, ஒவ்வோர் ஆறுக்கும் தனித்துவமான மீன் இனங்கள் ஒன்றிரண்டாவது இருக்கும்.

நன்னீர் மீன்களை பலரும் பல பெயர்களில் குறிப்பிடுகிறார்கள் என்பதால், அவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொன்னால், அது வேறு ஒரு பகுதியில் வாழ்பவர்களுக்கு தெரியாது. விதிவிலக்குகளாக, ஆற்றின் அடியில், பாறைகளோடு பாறையாய் ஒட்டிக்கொண்டிருக்கும் கல் ஒட்டி மீன்களும், விராலும் பலருக்கும் தெரிகிறது.
கடல் மீன்களின் பயண தூரத்தை கணிக்க முடிந்ததுபோல, நன்னீர் மீன்களின் பயண தூரத்தைக் கணிப்பது கடினம். அதற்குக் காரணமும், ஆறுகளுக்கு இடையே அணைகள் கட்டிய நாமன்றி வேறு யார்? நீலகிரி உயிர்க்கோளத்தில் உற்பத்தியாகிற ஒரு சில நன்னீர் மீன்கள் மட்டும் அரபிக்கடலின் கழிமுகம் வரை சென்று திரும்பி வருவதாக சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நன்னீர் மீன்கள் அழிந்தால் கூடவே நீர் நாய்களும் அழிய ஆரம்பிக்கும். ஏனென்றால், நீர் நாய்களின் உணவு நன்னீர் மீன்கள்தான். நீர் நாய்களை 'ஆற்றின் புலி' என்பார்கள். அந்தளவுக்கு அவை சிறந்த வேட்டையாடிகள். இவை, உயிரோடு இருக்கிற மீன்களையும் உண்ணும்; இறந்து நீர்நிலைக்கு அடியில் கிடக்கிற மீன்களின் உடலையும் உண்ணும். ஆக, காடுகளில் இருக்கிற நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது இந்த நீர் நாய்கள்தான் என்பது உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்.
நன்னீர் நிலைகளின் மேல் தும்பிகள் வட்டமிடுவதை சிறுவயதில் பார்த்திருப்போம். அங்குதான் தும்பிகள் முட்டை வைக்கும். நன்னீர் நிலைகளை மாசுப்படுத்தினோம் என்றால், தும்பிகளால் வாழ முடியாது. தும்பிகள் அசைவ உண்ணி. அவை வாழ்ந்தால்தான், கொசுக்களின் முட்டைகளைத் தின்று, கொசுக்களால் நமக்கு வரக்கூடிய நோய்களைத் தடுக்கும்.

நன்னீர் மீன்கள் அழிய ஆரம்பித்ததன் ஆரம்பப்புள்ளி எது தெரியுமா? நாம் ஆறுகளின் மத்தியில் கட்டிய அணைகள்தான். அணைகளைக் கட்டி ஓடும் நீரை தேக்கி, நன்னீர் மீன்களை அழிக்க ஆரம்பித்தோம். இதில் வேதனை முரணாக, அணைகளுக்குள் தேக்கி வைக்கப்பட்ட நீரில் மீன்களை வளர்க்க ஆரம்பித்தோம். கட்லா, ரோகு போன்ற அந்த வளர்ப்பு மீன்கள், நம் மரபு சார்ந்த, அந்தந்த மண் சார்ந்த, காலங்காலமாக அந்த உயிர்ச்சூழலில் வாழ்ந்து வந்த நன்னீர் மீன்களை சாப்பிட ஆரம்பித்தன.
இதுமட்டுமா..? ஓடுகிற நீரில் சாயத்தண்ணீரைக் கலந்தோம். நன்னீர் நிலைகளில் சோப்பு, ஷாம்பு போட்டுக் குளித்தாலே அதிலிருக்கிற மீன்கள் செத்துவிடும். இதில் சாயத்தண்ணீரைக் கலந்தால்..? விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிற பூச்சிக்கொல்லிகள் நன்னீர் மீன்களுக்கும் உயிர்க்கொல்லிகள்தான். போதாக்குறைக்கு நீர் நிலைகளை ஆக்கிரமிக்கவும் செய்தோம்.

நன்னீர் மீன்கள் வாழ்கிற ஆற்று நீரை எவ்வளவு பருகினாலும் நல்லது. இப்படிப்பட்ட நீரைத்தான் சமவெளிப்பகுதிகளில் மாசுப்படுத்தி விட்டோம். விளைவு, நீலகிரி உயிர்ச்சூழலில் நீந்தி வந்த 226 வகை நன்னீர் மீன்களில் 76 வகை, தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். நன்னீர் மீன்கள் மூலம்தான், நம்முடைய உணவுப்பழக்கத்தில் மீன்கள் அறிமுகமாயின. நதி, ஆறு, ஏரி, குளம் போன்ற நன்னீர் நிலைகளையும் நன்னீர் மீன்களையும் காப்பாற்றி, நம் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டாமா நாம்..?'' என, ஆதங்கத்துடன் கேட்கிறார் கோவை சதாசிவம்.