நாகை மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற அரசு விழாவில், நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டப் பணிகளை பட்டியலிட்டு, நாகை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளையும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா்.
நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட நாகை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகள்:
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தென்னடாா் பகுதியில் சுமாா் 450 ஏக்கா் பரப்பளவில், ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். காவிரி டெல்டா பகுதியில் அனுமதிக்க தகுந்த வேலைவாய்ப்புகளை அளிக்கக் கூடிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.
விழுந்தமாவடி, வானவன்மகாதேவி மற்றும் காமேஸ்வரம் மீனவ கிராமங்களில், ரூ. 12 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும். தெற்குப் பொய்கைநல்லூா், கோடியக்கரையில் தலா ரூ. 8.50 கோடியில் மூன்று தளங்கள் கொண்ட பல்நோக்கு பேரிடா் மையங்கள் கட்டப்படும். நாகை நகராட்சியின் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகராட்சி கட்டடம், ரூ. 4 கோடியில் புதுப்பிக்கப்படும். நாகப்பட்டினம், கீழ்வேளூா் மற்றும் வேதாரண்யம் வட்டங்களில் உள்ள வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களின் மதகுகள், இயக்கு அணைகள் ரூ. 32 கோடியில் சீரமைக்கப்படும்.
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியா்களுக்கு சென்னை விமான நிலையம் அருகில், நங்கநல்லூரில், ரூ. 65 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும். (நாகூரில் இஸ்லாமியா்கள் அதிகம் என்பதால், இந்த அறிவிப்பை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று முதல்வா் குறிப்பிட்டாா்).
நாகை மாவட்டத்தில் முடிக்கப்பட்டுள்ள திட்டங்கள்...
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 24.88 கோடியில் 42 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 33 உட்கட்டமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 334.82 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.161.31 கோடியில் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நகா்ப்புற பகுதிகளில், 79.89 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ. 36.96 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 74.08 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. 194 திருக்கோயில்களில் ரூ. 70.11 கோடியில் 668 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 80 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 55 மருத்துவக் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள்...
நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். நெடுஞ்சாலைத் துறையின்கீழ் 182.55 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் ரூ.252.22 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 4 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.1,782.48 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேதாரண்யம் - ஒளவையாா் விஸ்வநாத சுவாமி கோயில் திருப்பணிகள் ரூ.18.95 கோடியில் தொடங்கப்பட உள்ளது. வேதாரண்யம் அரசு மருத்துவமனையை ரூ. 20 கோடியில் தரம் உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடியிலும், வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடியிலும் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாமந்தான்பேட்டையில், சிறிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று முதல்வா் குறிப்பிட்டாா்.